Air India Plane Crash: குடியிருப்பு கட்டிடத்தில் மோதிய ஏர் இந்தியா விமானம்! வீட்டில் இருந்த 12 பேரும் உயிரிழந்ததாக தகவல்
காந்திநகர்: இன்று குஜராத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீரென புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த பயணிகள் பலரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க விமானம் அந்த குடியிருப்பு பகுதியில் மோதியதில் அங்கு வசித்த 12 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்தில் இருந்து லண்டனுக்குத் தினசரி ஏர் இந்தியா விமானம் இயக்கப்படும். இந்த விமானம் தினசரி மதியம் 1.10 மணிக்குக் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்படும். இன்று இந்த விமானம் வழக்கம் போலவே இயக்கப்பட்டது.

விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். 230 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என மொத்தம் 242 பயணிகள் விமானத்தில் இருந்துள்ளனர். விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.
இந்த விமானம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அடுத்துள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. விமானம் விழுந்த போதே அங்கிருந்து மிகப் பெரியளவில் கரும்புகை வெளியாகியிருந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொண்டனர்.
விமானத்தில் பயணித்தவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் விமானம் மோதியுள்ளது. விமானத்தின் முன்பகுதி அந்த கட்டிடத்தின் மீது மோதியுள்ளது. இது தொடர்பான போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே விமானம் கட்டிடத்தில் மோதியதில் அங்கு வசித்த 12 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கம் போல மதிய நேரம் அவர்கள் வீட்டில் இருந்த நிலையில், திடீரென விமானம் குடியிருப்பில் மோதியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
விமானத்தில் பயணித்தோரை மீட்கும் பணிகள் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், குடியிருப்பு பகுதியில் விமானம் மோதியதால் காயம் அடைந்தோரையும் மீட்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தனது நிறுவனத்தின் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளதை ஏர் இந்தியா உறுதி செய்துள்ளது. அதேநேரம் விமானத்தில் என்ன நடந்தது.. விபத்திற்கு என்ன காரணம்.. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்ததா.. இல்லை இதற்கு வேறு எதாவது காரணம் இருக்குமா என பல கேள்விகள் எழுந்துள்ளன. விரிவான விசாரணைக்கு பிறகே அந்த கேள்விகளுக்கான பதில் நமக்கு தெரிய வரும்.!












Click it and Unblock the Notifications