டேக் ஆப் சமயத்தில் நடந்த சம்பவம்.. ஏர் இந்தியா விமானத்தில் என்ன நடந்தது! வல்லுநர்கள் சொல்வது இதுதான்
காந்திநகர்: குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த விமானம் விபத்தில் சிக்க என்ன காரணம் என்பது குறித்து வல்லுநர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
இன்று குஜராத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மோசமான விபத்துகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

என்ன காரணம்
இதற்கிடையே இந்த விமானம் விபத்தில் சிக்க என்ன காரணம் என்பது குறித்து வல்லுநர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். அதாவது ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கப் பறவை மோதல் காரணமாக இருக்கலாம் என்றும் இதனால் விமானம் டேக் ஆஃப் ஆக தேவையான வேகத்தை அடைய முடியாமல் போயிருக்கலாம் என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
விமான விபத்து
அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் 171 புறப்பட்டது. வழக்கம் போல மதியம் 1.17 மணியளவில் இந்த விமானம் அகமதாபாத்தில் இருந்து கிளம்பியுள்ளது. புறப்பட்டு சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. மதியம் 1.30 மணியளவில் அந்த விமானம் விபத்தில் சிக்கியுள்ளது..
ஏர்போர்ட் அருகே இருந்த குடியிருப்பு பகுதியில் விமானம் மோதியுள்ளது. இந்த விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர்.. 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் கரும்புகை வெளியானது. உடனடியாக மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளையும் விரைந்து மேற்கொண்டனர்.
ஏர் இந்தியா
விமானம் விபத்தில் சிக்கியுள்ளதை ஏர் இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதேநேரம் விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையே விமானம் இதுபோல விபத்தில் சிக்க என்ன காரணம் என்பது குறித்த தகவல்களை வல்லுநர்கள் பிரபல ஆங்கில ஊடகமான என்டிடிவிக்கு அளித்துள்ளனர்.
வல்லுநர்கள் சொல்வது என்ன
இது தொடர்பாக முன்னாள் விமானியான கேப்டன் சௌரப் பட்நாகர் கூறுகையில், "முதலில் பார்த்தவுடன், இது பல பறவைகள் ஒரே நேரத்தில் மோதியதால் நிகழ்ந்த விபத்து போல் தெரிகிறது. இதில் இரண்டு என்ஜின்களும் சக்தியை இழந்துள்ளன. விமானம் சரியாகவே டேக் ஆப் ஆகியுள்ளது. ஆனால், அதன் பிறகு உடனே விமானம் இறங்கத் தொடங்கியது. என்ஜின் சக்தியை இழந்தாலோ அல்லது விமானத்தால் மேலே எழும்ப முடியாமல் போனதாலோ இது நடக்கலாம். விபத்திற்கான சரியான காரணம் விரைவில் விசாரணையில் தெரியவரும்" என்று தெரிவித்தார்.
அதாவது விமானம் புறப்பட்ட போது அது சரியாகவே இருந்துள்ளது. டேக் ஆப் ஆகும் போது விமானத்தில் திடீரென பல பறவைகள் இஞ்சினில் மோதி இருக்கலாம். இதனால் விமானத்திற்கு போதுமான வேகம் கிடைக்காமல் போய் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்பதை சவுரப் பட்நாகரின் கருத்தாக இருக்கிறது.
அதேநேரம் விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. தீவிர விசாரணைக்கு பிறகே விமானத்தில் என்ன நடந்தது.. விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த கேள்விகளுக்கு விடைகள் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications