கணவரை பார்க்க முதல் முறையாக லண்டன் புறப்பட்ட புதுப்பெண்.. கண்ணீரை வரவழைக்கும் விமான விபத்தின் சோகம்
அகமதாபாத்: அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர 241 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஜனவரியில் திருமணமான நிலையில் லண்டனில் படிக்கும் கணவரை பார்க்க முதல் முறையாக புறப்பட்ட புதுப்பெண் பலியாகி உள்ளார். அதேபோல் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி லண்டன் சென்றதன் பின்னணி உள்பட பல பயணிகளின் விமான பயணம் குறித்த சோக தகவல் வெளியாகி உள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1:39 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட அடுத்த ஒரு நிமிடத்தில் விபத்தில் சிக்கியது.

விமான நிலையத்தின் அருகே உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 241 ஆக உள்ளது.
இதுவரை 200க்கும் அதிகமானவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறிப்பாக குஜராத் மாநிலத்தில் கடந்த 2016 முதல் 2021ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த விஜய் ரூபானியும் இந்த விமான விபத்தில் பலியாகி உள்ளார். விஜய் ரூபானி கடந்த 2016 முதல் 2021 வரை 5 ஆண்டுகள் குஜராத் முதல்வராக இருந்தார். இவரது மகள் லண்டனில் உள்ளார். மகளை பார்க்க லண்டனுக்கு விமான பயணம் மேற்கொண்டபோது தான் விபத்து ஏற்பட்டு அவர் பலியாகி உள்ளார்.
அதேபோல் ராஜஸ்தானை சேர்ந்த புதுமண பெண் இறந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இவர் லண்டனில் உள்ள கணவரை பார்க்க விமானத்தில் பயணித்தபோது இறந்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் குஷ்பு. இவர் ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள அரபா கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்தார்.
குஷ்புவின் கணவர் பெயர் மன்பூல் சிங். இவர் லண்டனில் படித்து வருகிறார். இந்நிலையில் தான் திருமணமான பிறகு முதல் முறையாக லண்டன் சென்று தனது கணவர் மன்பூல் சிங்கை சந்திக்க குஷ்பு விரும்பினார். இதற்காக அவர் இன்று விமானத்தில் பயணித்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது. இதில் குஷ்பு பலியாகி உள்ளார்.
அதேபோல் டாக்டர் கோமிவியாஸ் என்பவர் தனது கணவர் பிரதீக் ஜோஷி மற்றும் தனது இரட்டை குழந்தைகள் உள்பட 3 குழந்தைகளுடன் லண்டனுக்கு புறப்பட்டார். அவர்கள் குடும்பமாக விமானத்தில் செல்பி எடுத்த நிலையில் தற்போது மொத்தமாக பலியாகி உள்ளனர். கேமி வியாஸ் உதய்ப்பூரில் டாக்டராக இருந்தார். சமீபத்தில் அவர் தனது பணியை ராஜினாமா செய்தார். இவர் தனது கணவருடன் லண்டனில் வசிக்க திட்டமிட்டு குடும்பத்துடன் விமானத்தில் சென்ற நிலையில் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.












Click it and Unblock the Notifications