தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விமான நிறுவன பாதுகாப்பு நிர்வாகி கைது
கொச்சின்: கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்துவதற்கு உடந்தையாக இருந்ததாக விமான நிறுவன பாதுகாப்பு நிர்வாகியை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கேரளாவில் கோழிக்கோடு அருகே முக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஷீனு ராஜ் (27). இவர் கடந்த இரண்டாண்டுகளாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் பாதுகாப்பு நிர்வாகியாக கொச்சின் விமான நிலையத்தில் பணி புரிந்து வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் ஸ்பைஸ் ஜெட்டில் இருந்து தனியார் விமான நிர்வாகத்தில் கரிபூர் விமான நிலையத்தில் பணியில் சேர்ந்தார்.
கொச்சின் விமான நிலையத்தில் பணி புரிந்த போது 14 கி தங்கம் கடத்த உடந்தையாக இருந்துள்ளார். ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இருக்கைகளின் அடியில் வைத்து சில பயணிகள் ஷீனுவின் உடந்தையோடு தங்கம் கடத்தியுள்ளனர். விமான நிலையத்தில் ஷீனுவைச் சந்தித்து அவர்கள் எந்த இருக்கையின் கீழ் தங்கம் உள்ளது என்ற தகவல்களை அளித்துள்ளனர்.
பின்னர் அவற்றை எடுத்து உரியவர்களிடம் சேர்த்துள்ளார் ஷீனு. இது போல் 13 தடவைக்கும் மேல் அவர் தங்கம் கடத்த உதவியுள்ளார். இது தவிர 6 முறை அவர் தனியாகவும் தங்கம் கடத்தியுள்ளார்.கடந்த 20 மாதங்களில் இதுபோல ரூ. 950 கோடி மதிப்புள்ள 3500 கிலோ தங்கத்தைக் கடத்தியுள்ளனர்.
சமீபத்தில் தங்கம் கடத்த முயன்ற ரிம்ஷாத் என்பவரைப் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் தற்போது ஷீனு கைது செய்யப்பட்டுள்ளார்.