இனி விமான நிலையங்களிலும் ஆதார் கட்டாயம்!
இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்குள் செல்ல ஆதார் எண் கட்டாயமாக்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
பெங்களூர்: இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்குள் நுழைய ஆதார் எண்ணை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதல்கட்டமாக பெங்களூர், ஹைதராபாத் விமான நிலையத்தில் அமலுக்கு வந்துள்ளது.
ஆதார் திட்டம், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு, பொதுமக்கள் அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு, ஆதார் எண் அவசியம் என வற்புறுத்தி வருகிறது.
இந்நிலையில் விமான பயணத்துக்கு பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆதார் எண்ணை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்ய பயணிகள் விமான நிலையத்தில் நுழையும் போதே அந்த நுழைவு வாயிலில் வைக்கப்பட்டு உள்ள எந்திரத்தில் தங்களது கைரேகையை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே ஆதார் அட்டைக்காக பதிவு செய்து வைத்துள்ள கைரேகையும் இப்போது ஸ்கேன் செய்கிற பயணியின் கைரேகையும் ஒன்றாக உள்ளதா? என்பது இதன் மூலம் தெரிந்து விடும். இரண்டும் ஒன்றாக இருந்தால்தான் அந்த பயணி விமானத்தில் பயணம் செய்ய முடியும். இதன் மூலம் ஒருபயணியை முழுமையாக பரிசோதனை செய்யமுடியும்.
இந்த திட்டம் சோதனை முயற்சியாக தற்போது ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையத்தில் அமுல்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் சென்னை உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.