மோடி போட்டியிட்ட வாரணாசியை மின்வெட்டு இல்லா மாவட்டமாக்க உ.பி. முதல்வர் அகிலேஷ் உத்தரவு
வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியை மின்வெட்டு இல்லா மாவட்டமாக்க உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். அதன் பின்னர் வதோதரா எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் வாரணாசியை மின்வெட்டு இல்லா மாவட்டமாக அறிவிக்கக் கோரி தெற்கு வாரணாசியில் இருந்து 7 முறை தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.வான ஷியாம்தியோ ராவ்சவுத்ரி கடந்த மாதம் 27ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார்.
அவரை சந்தித்து பேசிய பிறகு வாரணாசியி மின்வெட்டு இல்லா மாவட்டமாக்க வேண்டும் என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
மே 12ந் தேதி வாக்குப்பதிவு நடப்பதற்கு முந்தைய நாள் வாரணாசி மற்றும் ஆசம்கரில் 18 மணிநேரத்திற்கு பதிலாக 22 மணிநேரம் மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டது. சமாஜ்வாடி கட்சி தலைவரான முலாயமின் தொகுதியான ஆசம்கரில் 22 மணிநேரம் மின்சாரம் வழங்கப்பட்டபோதிலும் வாரணாசியில் மின்வெட்டு இருந்தது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர்களின் தொகுதியான இடாவா, கன்னௌஜ் உள்ளிட்ட தொகுதிகள் மின்வெட்டு இல்லா தொகுதிகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications