மதுவிலக்கு கடினமானது.. குறைவாக மது அருந்துங்கள்: உ.பி. முதல்வர் அகிலேஷ் அட்வைஸ் !
லக்னோ: மதுவிலக்கு முடிவை அவசரமாக எடுக்க முடியாது, குறைவாக மது அருந்துங்கள் என்றே இப்போதைக்குக் கூற முடியும் என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் முழு மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளார் மாநில முதல்வர் நிதிஷ்குமார். இதை அடுத்து அதன் அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்துக்கு மதுபிரியர்கள் படை எடுப்பதால் அங்கு மதுவிற்பனை அதிகரித்துள்ளது.

இதனிடையே பீகாரின் மற்றொரு எல்லையில் அமைந்துள்ள நம் நாட்டின் அண்டை நாடான நேபாளத்திலும் மது விற்பனை அதிகரித்துள்ளது. இந்தப் பகுதியில் உருவான திடீர் குடிசைகளில் நேபாளத்தில் தயாரிக்கப்படும் மது விற்பனை செய்யப்படுகிறது.
இதை அருந்து பீகார் வாசிகள் தினம்தோறும் அங்கு படைஎடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று முன்தினம் எல்லைதாண்டி நேபாள நாட்டுக்கு மதுஅருந்தச் சென்ற 70 இந்தியர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் கூறும்போது, உத்தரப்பிரதேசத்தில் முழு மதுவிலக்கு முடிவை உடனடியாக எடுப்பது சாத்தியமல்ல, குறைவாக மது அருந்துங்கள் என்றே இப்போதைக்கு அறிவுரை வழங்க முடியும்.
கரும்பு விவசாயிகளின் நலன், மதுக்கடைகளில் பணியாற்றும் லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும் இது. எனவே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
முழு மதுவிலக்கால் மாநிலத்துக்கு ஏற்படும் வருவாய் இழப்பை பிறவற்றின் மூலம் ஈடுகட்ட முடியும் என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கூறியதற்கு பதில் அளிக்குமாறு அகிலேஷ் யாதவ் இதனைத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications