கேரளாவில் விரைவில் “பூரண மதுவிலக்கு” – உம்மன் சாண்டி அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் மதுவிலக்கு கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்தப்பட உள்ளது.
மேலும், அடுத்த பத்து ஆண்டுகளில் கேரளா பூரண மதுவிலக்கு பெற்ற மாநிலமாக இருக்கவேண்டும் என்ற இலக்கை அடைவோம் என்றும் அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், அரசுக்கு வருமானத்தைவிட மக்களின் நலனே முக்கியம் என்றார்.

பார்களுக்கான உரிமம்:
"புதிய பார்களுக்கான உரிமங்கள் எதுவும் இனிமேல் வழங்கப்படமாட்டாது. ஏற்கனவே 400க்கும் மேற்பட்ட பார்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்.

மக்கள்தான் முக்கியம்:
இதை பார்த்தால் வரும் காலங்களில் மக்களின் வாழ்கைத்தரம் மோசமாகிவிடும். அரசுக்கு வருமானத்தைவிட மக்களே முக்கியம். அதே நேரத்தில் மதுவை அதிரடியாக தடை செய்தால் மக்கள் மட்டுமல்ல அரசும் நிலை தடுமாறும் நிலமை வரும். அதனால் படிப்படியாக மதுவிலக்கு அமலுக்கு வரும்" என்று அவர் மேலும் கூறினார்.

7500 கோடி வருமானம்:
கேரள மாநிலத்தின் கடந்த நிதியாண்டில் 9,300 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மீதான வரிகள் மூலம் அரசுக்கு ரூபாய் 7,500 கோடி கிடைத்துள்ளது.

வருவாய் இழப்பு கவலை இல்லை:
இதனை அக்கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்ட உம்மன் சாண்டி, இருப்பினும் மக்கள் நலனைகருத்தில்கொண்டு, மதுவிற்பனையின் மீதான வரி மூலம் கிடைக்கும் வருவாயை இழக்க அரசு தயாராகி வருவதாகவும், மதுவினால் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பை அரசு உணர்ந்துள்ளதாகவும் கூறினார்.

விற்பனை அளவு குறைப்பு:
மேலும் மதுவிலக்கை அமல்படுத்துவதன் முதல்கட்ட நடவடிக்கையாக, மதுபாட்டில்களின் விற்பனை அளவை குறைக்கவும், மக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உரிமம் வழங்கப்படவில்லை:
கேரளாவில் 752 பார்கள் மற்றும் ஓட்டல்களிலும், 383 அரசு மதுபான விற்பனைக் கூடங்களிலும் மதுவிற்பனை செய்யப்படுகிறது. உம்மன் சாண்டி அரசு, கடந்த 2011 மே மாதம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து புதிய மதுவிற்பனை கடைகள் தொடங்க உரிமங்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் எப்போது?:
படிப்பில் மட்டுமல்ல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்துவதிலும் கேரளா முதலிடத்தில் உள்ளது.பக்கத்து மாநிலமான கேரளாவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களும், நந்தினி போன்றவர்களும் பூரண மதுவிலக்கிற்காக போராடி வந்தாலும் தமிழக அரசு டாஸ்மாக்கை ஒழிப்பதாய் இல்லை.

யோசிக்குமா தமிழக அரசு:
செய்வீர்களா என்று கேட்பதை நிறுத்திவிட்டு தமிழக முதல்வர் மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டத்தின் மூலம் மக்களுக்கு நல்லது செய்தால் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications