மேற்கூரை ஓட்டை.. கப்படித்த கழிவறை.. அமர்நாத் செல்லும் BSF வீரர்களின் சிறப்பு ரயிலை பாருங்க! மோசம்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் அடுத்த மாதம் தொடங்கும் அமர்நாத் யாத்திரையின் பாதுகாப்பு பணிக்காக சென்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு இந்தியன் ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் ஒதுக்கப்பட்டது. இந்த ரயிலின் மேற்கூரை ஓட்டையாக இருந்தது. இருக்கைகள் கிழிந்து இருந்ததோடு, கழிவறை, ரயில் பெட்டி துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் ரயில்வேயை கடுமையாக பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற அமர்நாத் குகை கோவில் உள்ளது. இங்கு இயற்கையான பனி லிங்கம் அமைந்துள்ளது. இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் யாத்திரை நடைபெறும். இந்த யாத்திரையின்போது நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ம் தேதி வரை 38 நாட்கள் நடைபெற உள்ளது. பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதனால் இந்த முறை அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
581 கம்பெனியை சேர்ந்த 42 ஆயிரம் மத்திய ஆயுதப்படை வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளனர். மேலும் எல்லை பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணிக்காக அங்கு செல்கின்றனர். ஜூன் 6 ம் தேதி திரிபுராவின் உதய்பூரிலிருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள தாவிக்கு சிறப்பு ரயிலில் 13 கம்பெனியை சேர்ந்த 1,200 எல்லை பாதுகாப்பு படையினர் செல்ல திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரிபுரா, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்தும் வீரர்களை அழைத்து செல்ல வேண்டியிருந்தது. இதனால் இந்த ரயில் பயணம் கடந்த 9 ம்தேதி தொடங்கியது.
அப்போது ரயில் பெட்டிகள் மிகவும் மோசமாக இருந்தது. ரயில் பெட்டியில் உள்ள கழிவறை சுத்தமின்றி அழுக்காக இருந்தது. துர்நாற்றம் வீசியது. ரயில் பெட்டியில் ஜன்னல் பகுதிகள் உடைந்து இருந்தது. கோச்சின் இருக்கைகள், மேற்புறம் சேதமாகி இருந்தது. மேலும் பெட்டி சுத்தம் செய்யப்படாமல் குப்பைகளுடன் மோசமாக காட்சியளித்தது. இதுதொடர்பான வீடியோ வெளியானது. எல்லை பாதுகாப்பு படையினருக்கு நல்ல ரயில் பெட்டிகளுடன் கூடிய சிறப்பு ரயில் ஒதுக்கப்படாததால் ரயில்வே நிர்வாகத்தை பலரும் விமர்சிக்க தொடங்கினர்.
இதையடுத்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தூய்மை இல்லாத பெட்டிகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி அலிபுர்தர் ரயில் டிவிஷனை சேர்ந்த 3 மூத்த செக்சன் இன்ஜினியர் மற்றும் கோச்சிங் டெப்போ அதிகாரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இதுபற்றி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‛‛பாதுகாப்பு படையினர் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற அலட்சியத்தை எந்த மட்டத்திலும் பொறுத்து கொள்ள முடியாது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது என்பதற்காக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications