துணை ராணுவப்படை குவிப்பை அடுத்து அமர்நாத் யாத்திரையும் நிறுத்தம்.. காஷ்மீரில் என்ன நடக்கிறது?
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அங்கு அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அங்கு அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக காஷ்மீர் பிரச்சனை மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. திடீர் என்று துணை ராணுவப்படையினர் அதிக அளவில் காஷ்மீர் எல்லையில் நிறுத்தப்பட்டு வருகிறார்கள். லோக்சபா தேர்தல் முடிந்த போதே காஷ்மீர் எல்லையில் 40,000 துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று 10000 துணை ராணுவ படையினர் காஷ்மீர் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் கூடுதல் வீரர்கள் விரைவில் காஷ்மீர் எல்லைக்கு அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு நாட்களுக்கு முன் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் சென்றார். அங்கு முக்கிய அதிகாரிகள், ராணுவ வீரர்கள், உளவுத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பின்புதான் காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு அதிகம் ஆகியுள்ளது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்பு ஒன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. அதனால்தான் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அங்கு அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 1ம் தேதி காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தொடங்கியது. கடந்த 27 நாட்களில் மட்டும் மொத்தம் 3,17,726 பேர் அங்கு குகையில் தரிசனம் செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மொத்தமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மழை காரணமாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு அதிகமாக மழை பெய்து வருவதால், யாத்திரை நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதமாகவே அங்கு மழை பெய்கிறது. ஆனால் அப்போதெல்லாம் யாத்திரையை நிறுத்தவில்லை. இப்போது மட்டும் ஏன் நிறுத்தி உள்ளனர் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தீவிரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கையை அடுத்தே இந்த நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு பின் பாதுகாப்பு காரணங்கள் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications