நம் நாடு வளர்ச்சி அடையாமல் போனதற்கு காங்கிரஸ் அரசுதான் காரணம் - அமித்ஷா தாக்கு
லக்னோ: நாடு வளர்ச்சி அடையாமல் போனதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுகளே காரணம் என பா.ஜ.க. தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி உத்தர பிரதேச மாநிலம் லக்னோ புறநகரான ககோரியில் இன்று பா.ஜ.க. சார்பில் தியாகிகளை கவுரவிக்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொண்டு பேசியதாவது: நம் நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் நாட்டில் வளர்ச்சி இல்லை, காரணம் ஒரே குடும்பம் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. இதனைக் கூறும்போது நான் வருந்துகிறேன், ஆட்சிக்கட்டிலில் இருந்தது காங்கிரஸ் ஆனால் முடிவுகள் இன்று நம் கண்முன்னே சாட்சியமாக விரிந்துள்ளது.
நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் மாநிலங்கள் வளர்ச்சி அடைய வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதியோ, பகுஜன் சமாஜோ ஆட்சிக்கு வந்தால் அவர்கள் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் நலனிலேயே அக்கறை செலுத்துவார்கள். பா.ஜ.க. மட்டுமே அனைத்துத் தரப்பினர் வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த மாநில வளர்ச்சிக்கும் உழைக்கும். உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சி இல்லாமல் நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது.
நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது. கிராமங்களில் மின்சாரம் இல்லை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை, வேளாண் நிலங்கள் பயிர்செய்வதற்கான பாசன வசதிகள் இல்லை, மருந்துகள் இல்லாமல் ஏழைகள் இறந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications