''மம்தா மருமகனை முதல்வராக்க விரும்புகிறார்; மோடி ஜனநாயக ஆட்சி அமைய விரும்புகிறார்''.. அமித்ஷா பளிச்!
கொல்கத்தா: மம்தா தீதி(அக்கா) தனது மருமகனை அடுத்த முதல்வராக்க விரும்புகிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
இந்தியாவில் நல்லாட்சியை வழங்கி வரும் பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் ஜனநாயாக ஆட்சி அமைய விரும்புகிறார் என்றும் அமித்ஷா கூறினார்.
மேற்கு வங்க மாநிலத்திலும் தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
'நினைத்ததை' முடித்த அமித் ஷா.. கிளைமேக்ஸ் நோக்கி 'மிஷன் மம்தா' - திருப்பி அடிப்பாரா?
சூடுபிடிக்கும் தேர்தல் களம்
அங்கு பாஜக-ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. அங்கு இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.இதனால் பாஜகவின் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுவேந்து-மம்தா நேருக்கு நேர் மோதல்
சமீபத்தில் பிரசாரத்தின்போது காலில் காயம் அடைந்த மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரசின் தலைவருமான மம்தா பானர்ஜி, காலில் கட்டுடன் வீல் சேரில் அமர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே முன்பு மம்தாவின் வலது கரமாக விளங்கி, தற்போது பாஜகவின் ஐக்கியமாகியுள்ள மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியும், மம்தா பானர்ஜியும் நந்திகிராம் தொகுதியில் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
திரிணாமுல் தேர்தல் அறிக்கை
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் மாணவர்களுக்கு கடன் அட்டை, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஊதியம் போன்ற அறிவிப்புகள் இடம் பெற்றன இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்கம் எக்ராவில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக பேசிய அமித்ஷா கூறியதாவது:-
குண்டர்களை சிறையில் அடைப்போம்
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது முதல் குற்றச் சம்பவங்கள் பல்கிப்பெருகி விட்டன. இந்த ஆட்சியில் 130 பாஜகவினர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைகளை செய்த திரிணாமுல் குண்டர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்க வேண்டாம். பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்த குண்டர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் .
அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு
மம்தா தீதி(அக்கா) தனது மருமகனை அடுத்த முதல்வராக்க விரும்புகிறார். ஆனால் இந்தியாவில் நல்லாட்சியை வழங்கி வரும் பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் ஜனநாயக ஆட்சி அமைய விரும்புகிறார். பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்துவோம் என்று அமித்ஷா பேசினார்.