கொல்கத்தா விமான நிலையத்தில் அமித்ஷாவுடன் சீதாராம் யெச்சூரி திடீர் சந்திப்பால் பரபரப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும் என்கின்றன கருத்து கணிப்புகள்.
இந்த நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் விமானத்துக்காக சீதாராம் யெச்சூரி காத்திருந்தார். அப்போது திடீரென உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அந்த அறைக்குள் நுழைந்திருக்கிறார்.
இதனால் அங்கிருந்து சீதாராம் யெச்சூரி எழுந்து வெளியே செல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால் அமித்ஷாவோ பாதுகாவலர்களை வெளியே அனுப்பிவிட்டு யெச்சூரியுடன் அரை மணிநேரம் பேசி இருக்கிறார்.
அமித்ஷா- சீதாராம் யெச்சூரி இடையேயான இந்த திடீர் சந்திப்பு மேற்கு வங்க அரசியலில் புயலை கிளப்பி வருகிறது.