தடுப்பூசியில் அரசியல் செய்யாதீங்க...விஞ்ஞானிகள் திறமையை அவமதிக்காதீங்க...அமி்த்ஷா காட்டம்!
குவஹாட்டி: கொரோனா வைரஸ் தடுப்பூசியில் அரசியல் செய்வது நமது விஞ்ஞானிகளின் திறமையை அவமதிப்பதாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமி்த் ஷா தெரிவித்தார்.
அரசியல் செய்வதற்கு பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. ஏன் மக்களின் உடல்நலன் தொடர்பான விஷயங்களில் அரசியல் செய்கிறீர்கள? என அவர் காட்டமாக கூறினார்.
மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் ஒரே நேரத்தில் 130 கோடி மக்கள் உள்ள தேசத்தில் கொரோனா எளிதாக சமாளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் பெருமையுடன் தெரிவித்தார்.

அமித்ஷா காட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அசாம் மாநிலம் குவஹாட்டி நகரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கான ஆயுஷ்மான் திட்டத்தை அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கொரோனா வைரஸ் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள். அரசியல் செய்வதற்கு பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. ஏன் மக்களின் உடல்நலன் தொடர்பான விஷயங்களில் அரசியல் செய்கிறீர்கள்.

நமது நாட்டுக்கு பெருமை
கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் நமது விஞ்ஞானிகள் கடின உழைப்பால் உருவானவை. நீங்கள் கரோனா தடுப்பூசியில் அரசியல் செய்தால், அது நமது விஞ்ஞானிகளின் திறமையை அவமதிப்பதாகும். கொடிய வைரஸுக்கு எதிராக தேசம் கடுமையாக போரிட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் இந்த அரசும், மக்களும் இணைந்து செயல்பட்டார்கள். உலகிலேயே கொரோனாவில் இருந்து அதிகமாக மீண்டவர்களும், குறைந்த இறப்பு வீதம் உள்ள நாடு நமது நாடு ஆகும்.

எளிதாக சமாளித்தோம்
மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் ஒரே நேரத்தில் 130 கோடி மக்கள் உள்ள தேசத்தில் கொரோனா எளிதாக சமாளிக்கப்பட்டுள்ளது. சிஏபிஎப் வீரர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், வீட்டு வசதிகள் போன்றவை உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் தங்கள் குடும்பத்தாருடன் வீரர்கள் தங்குமாறு விடுப்பு அளிக்க உறுதி செய்யப்படும்.

மிகப்பெரிய தடுப்பூசி திட்டம்
உலகிலேயே மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, அது வேகப்படுத்தப்பட்டு வருகிறது. போலீஸார், ஆயுதப்படையினர் , மாநில காவல்துறையினர் எந்தவிதமான விருப்பு, வெறுப்பின்றி கொரோனா தடுப்பூசிகளை போடுகிறார்கள் என்று அமித்ஷா கூறினார்.












Click it and Unblock the Notifications