தாவூத்திடம் போனில் பேசிய மகாராஷ்டிரா அமைச்சர் மீது அமித் ஷா கோபம்! பதவியை பறிக்க முடிவு
மும்பை: நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு மற்றும் முறைகேடான நில விற்பனை ஆகிய விவகாரங்களில் சிக்கியுள்ள மகாராஷ்டிரா மாநில வருவாய் துறை அமைச்சர் ஏக்நாத் கட்சே விவகாரம் பற்றிய முழு விவரத்தையும் அறிக்கையாக அளிக்கும்படி, அம்மாநில பாஜக தலைமைக்கு, தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். அமைச்சரின் பதவி விரைவில் பறிக்கப்படும் என்று தெரிகிறது.
அமைச்சர் கட்சேவின் செல்போனிலிருந்து தாவூத் எண்ணுக்கு போன் செய்யப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மியை சேர்ந்த செல்போன் ஹேக்கர் ஒருவர் தகவல் வெளியிட்டார். இந்த அதிர்ச்சி ஓயும் முன்பாக, 23 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை, ரூ.3 கோடிக்கு, கட்சே மனைவி மற்றும் மருமகன் வாங்கிய தகவல் வெளியாகியது.

இதுகுறித்து மகாராஷ்டிர பாஜக தலைவர் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளதாவது: ஊழல் விஷயத்தில் சிறிதளவும் சமரசம் செய்யக்கூடாது என்பது பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் கொள்கை. எனவே உடனடியாக அமைச்சர் கட்சே பற்றி அறிக்கையை தனக்கு அனுப்பி வைக்குமாறு மாநில தலைமைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கட்சேவை பதவியிலிருந்து நீக்க பாஜக மேலிடத்திலிருந்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் கட்சே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிவரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கட்சே பங்கேற்கவில்லை. அரசு தந்த காரையும் பயன்படுத்துவதை தவிர்த்துள்ளார். எனவே கட்சேவின் பதவி பறிப்புக்கு பாஜக தலைமை ஆயத்தமாகியுள்ளதாகவே தெரிகிறது.
மூத்த அமைச்சர்களில் ஒருவரான கட்சே, தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். எனது மனைவி, மருமகன் வாங்கிய நிலத்துக்கு மார்க்கெட் வழிகாட்டு மதிப்பு படிதான் பணம் கொடுக்கப்பட்டு உள்ளது. தாவூத்துக்கு எனது செல்போனிலிருந்து போன் செய்யப்படவில்லை. போலியாக கூட இதுபோல ஆவணங்களை உருவாக்க சாப்ட்வேர்கள் உள்ளன என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications