சிக்கிமில் அதிகாலையில் குலுங்கிய வீடுகள்.. 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு! மக்கள் பீதி
கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவில் 4.4 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சிக்கிம் மாநிலம் சோரெங்கில் இன்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 4.4 என்பது மிதமான அளவுதான். எனவே இதுவரை அப்பகுதியில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் சமீப காலமாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த 6ம் தேதி மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் 3.1 மற்றும் 2.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அருணாச்சல பிரதேசத்திலும் 2.3 என்கிற அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இதற்கும் முன்னர் கடந்த மாதம் 12ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் ரிக்டர் அளவில் 4.1 என்கிற அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
டெக்டானிக் பிளேட்டுகளின் நகர்வுகளே நிலநடுக்கம் ஏற்படுவதற்கு பொதுவான காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது பூமியின் மீது நிலத்தட்டுக்கள் இருக்கின்றன. இதைத்தான் விஞ்ஞானிகள் டெக்டானிக் பிளேட் என்று கூறுகின்றனர். ஒரு காலத்தில் இவை அனைத்தும் இணைந்து ஒரே தட்டாக பெரிய நிலப்பரப்பாக இருந்தது. ஆனால், கால மாற்றத்தில் இது உடைந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கமாக சென்றுவிட்டது. இப்படித்தான் ஏழு பெரும் கண்டங்கள் உருவாகின.
இதில் சேராத நிலப்பரப்புகள் தீவுகளாக மாறின. சில நேரங்களில் இந்த நிலப்பரப்புகள் மெல்ல நகர்ந்து பெரிய நிலப்பரப்பின் மீது மோதுவதுண்டு. தற்போது இருக்கும் இமயமலையும் இப்படித்தான் உருவாகியிருக்கிறது. இந்திய நிலப்பரப்பு ஆசிய கண்டத்துன் மோதியதால் இமயமலை உருவாகியுள்ளது. இந்த மோதல் இன்றும் நீடித்து வருகிறது. எனவே ஆண்டுக்கு சில இன்ச் அளவுக்கு இமய மலையின் உயரம் கூடிக்கொண்டே வருகிறது.
அதேநேரம் லேசான நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன. இப்படித்தான் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications