பாவம்.. கோழியை வெட்டாதீங்க? பாதயாத்திரைக்கு நடுவே ஆனந்த் அம்பானி செய்ததை பாருங்க.. தப்பிய கோழிகள்
காந்தி நகர்: முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருந்து துவாரகாவிற்கு இரவில் பாதயாத்திரை சென்று வருகிறார். நேற்றைய தினம் பாதயாத்திரை செல்லும்போது இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 250 கோழிகளை அவர் கூடுதல் விலை கொடுத்து பத்திரமாக மீட்ட வீடியோ வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
நம் நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீதா அம்பானி. தற்போது நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இவர்களுக்கு சொந்தமானது தான்.

முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கு தற்போது 29 வயது ஆகிறது. தற்போது ஆனந்த் அம்பானி பாதயாத்திரையை தொடங்கி உள்ளார்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து சுமார் 140 கிமீ தூரம் உள்ள துவாரகா நோக்கி அவர் பாதயாத்திரை புறப்பட்டுள்ளார். தினமும் 10 முதல் 12 கிமீ தொலைவை அவர் இரவில் நடந்து கடந்து வருகிறார். மார்ச் 10ம் தேதி அவரது பிறந்தநாளாகும். தனது 30வது பிறந்தநாளையொட்டி துவாரகா சென்று அங்குள்ள துவாரகாதீஷ் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இந்த பாதயாத்திரையை தொடங்கி உள்ளார்.
நேற்றுடன் 5 நாள் பாதயாத்திரையை அவர் முடித்துள்ளார். இன்னும் சில நாட்கள் அவர் நடந்து சென்று துவாரகாதீஷ் கோவிலை சென்றடைய உள்ளார். நேற்றைய தினம் ஆனந்த் அம்பானி தனது பாதுகாவலர்களுடன் துவாரகா மாவட்டம் காம்பாலியா டவுனில் அவர் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் கோழிகளை ஏற்றி கொண்டு வாகனம் ஒன்று சென்றது.
இதை பார்த்தவுடன் ஆனந்த் அம்பானி அந்த வாகனத்தை நிறுத்தும்படி கூறினார். பாதுகாவலர்கள் வாகனத்தை நிறுத்தினர். இதையடுத்து வாகனத்தில் இருந்தவர்களின் அருகே சென்ற ஆனந்த் அம்பானி, ‛‛கோழிகளை எங்கு கொண்டு செல்கிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அந்த நபர், ‛‛இறைச்சிக்காக கொண்டு செல்கிறோம்'' என்று கூறினார்.
இதை கேட்ட ஆனந்த் அம்பானி அந்த கோழிகளை மீட்க நினைத்தார். இதையடுத்து அவர் ‛‛இந்த கோழிகளை வெட்ட வேண்டாம். இந்த கோழிகளை எனக்கு தந்துவிடுங்கள். நான் வளர்த்து கொள்கிறேன். இந்த கோழிகளை நானே விலை கொடுத்து வாங்கி கொள்கிறேன்'' என்றார். இதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டார். இதையடுத்து 250 கோழிகளுக்கு இரட்டை விலை கொடுத்து ஆனந்த் அம்பானி வாங்கி கொண்டார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையதளங்களில் பரவி வருகிறது. அதில் ஆனந்த் அம்பானி தனது கையில் ஒரு கோழியை வைத்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதில், ‛‛உடனடியாக கோழிகளை காப்பாற்றுங்கள். அனைத்து கோழிகளையும் வாங்கி கொண்டு அதன் உரிமையாளர்களுக்கு பணத்தை கொடுங்கள்'' என கூறும் காட்சிகள் உள்ளன.
மீட்கப்பட்ட இந்த 250 கோழிகளும் ஆனந்த் அம்பானியின் வந்தாரா பராமரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனந்த் அம்பானிக்கு விலங்குகள் உள்பட பிற உயிரினங்கள் மீது அளவுக்கடந்த பாசம் உள்ளது. இதனால் விலங்குகளுக்கு மறு வாழ்வு வழங்கும் வகையில் ஆனந்த் அம்பானி வந்தாரா விலங்குகள் மீட்பு மற்றும் பராமரிப்பு மையத்தை தொடங்கினார். குஜராத்தின் ஜாம்நகரில் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் 2,000க்கும் அதிகமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வந்தாரா பராமரிப்பு மையத்துக்கு தான் இந்த கோழிகளும் கொண்டு செல்லப்பட்டன.
இதுபற்றி ஆனந்த் அம்பானி,‛‛சனாதன தர்மத்தில் நம்பிக்கை வேண்டும் என்று இளைஞர்களிடம் நான் சொல்ல விரும்புகிறேன். கடவுளின் ஆசீர்வாதம் எனக்கு பலம் தந்துள்ளது. நான் 5 நாட்களாக நடந்து வருகிறேன். அடுத்த ஐந்து நாட்களில் நான் துவாரகாதீஷ் கோவிலை அடைவேன். இது என் முதல் பாதயாத்திரை இளைஞர்கள் கடவுளை மதிக்க வேண்டும். சனாதன தர்மத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடவுள் இருக்கும்போது நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது'' என்றார்.












Click it and Unblock the Notifications