வேட்டைக்காரர்களால் போதைக்கு அடிமையாகி, பாலியல் ரீதியாக சீரழியும் ‘ஜரவாஸ்’ பெண்கள்
போர்ட் பிளேர்: அந்தமான் பழக்குடியின மக்களான ஜரவாஸ் இனப் பெண்கள் வேட்டைக்காரர்களால் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி பாலியல் ரீதியாக பாதிக்கப் படுவதாக புதிய குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது அந்தமான் பத்திரிக்கை ஒன்று.
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் ஜரவாஸ் என்னும் பழங்குடியினர் வாழ்கின்றனர். இவர்கள் ஆடைகள் எதுவும் அணியாமல் வாழக்கூடிய காட்டுவாசிகள் ஆவர்.
அந்தமான் நிக்கோபர் செல்லும் சுற்றுலாப்பயணிகளால் இவர்களது வாழ்க்கை முறை பாதிக்கப் பட்டு விடாமல் இருக்க அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில் வேட்டைக்காரர்கள் அவர்களது வாழ்க்கை சீரழிந்து வருவதாக அப்பத்திரிக்கைதெரிவித்துள்ளது.
ஜரவாஸ்....
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் குறிப்பிட்ட பகுதிகளில் ஜரவாஸ் எனும் பழக்குடிமக்கள் வசித்து வருகிறார்கள். பாதுகாப்பு காரணங்கள் கருதி இவர்களை பார்ப்பதற்கோ, பேசுவதற்கோ அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது.
குறைந்து வரும் எண்ணிக்கை...
கடைசியாக எடுக்கப் பட்ட கணக்கின் படி தற்போது மொத்தமே 420 ஜரவாஸ் பழங்குடியின மக்கள் மட்டுமே மீதம் உள்ளனராம். இந்த இனமக்கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இப்பகுதிக்கு வாழ வந்தவர்கள் என வரலாறு சொல்கிறது.
நிர்வாண நடனம்....
ஆனபோதும், வித்தியாசமான உணவுப் பொருட்களைச் சாப்பிடும் ஆசையில் இவர்கள் தங்கள் பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளைக் காண வருகிறார்கள். அந்தவகையில், கடந்தாண்டு ஜரவாஸ் பெண்களை ஆடையில்லாமல் நடனம் ஆட வைத்த சுற்றுலாப் பயணிகள் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.
கடுமையாக்கப் பட்ட தண்டனைகள்...
அதனைத் தொடர்ந்து போலீசார் உட்பட சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப் பட்டனர். அதனித் தொடர்ந்து பழங்குடியினரைத் தொந்தரவு செய்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப் படும் என தண்டனைகள் கடுமையாக்கப் பட்டன.
பெண்கள் வேட்டை....
இந்நிலையில் ஜரவாஸ் வாழும் காடுகளில் வேட்டையாட வரும் வேட்டைக்காரர்கள் விலங்குகளோடு சேர்த்து அங்குள்ள பெண்களையும் வேட்டையாடிச் செல்வதாக குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர் அப்பகுதி மக்கள்.
பாலியல் தொல்லைகள்...
இது குறித்து அப்பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள ஜரவாஸ் ஆண் ஒருவர் கூறுகையில், ‘வேட்டைக்காரர்களும், மீனவர்களும் எங்கள் பகுதி பெண்களுக்கு போதைப் பழக்கத்தை அறிமுகப் படுத்தி, கட்டாய உறவு கொள்கின்றனர்' எனத் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு....
மேலும், குடிசைகளில் படுத்துறக்கும் ஜரவாஸ் பெண்களை முதலில் சீண்டிப் பார்க்கிறார்களாம் அவர்கள். அதனைத் தொடர்ந்து மது போன்ற பொருட்களைக் கொடுத்து அவர்களை சீரழிப்பதாகவும், பின்னர் அவர்களது குடிசையிலேயே இரவுகளைக் கழிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நிர்வாகக் குறைபாடு...
இவ்வாறு பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவது பெரும்பாலும் ஆதரவற்ற மற்றும் கணவனை இழந்த பெண்கள் தான் என்றும், அரசின் நிர்வாகக் குறைபாடே காரணம் எனவும் அப்பத்திரிக்கை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
ஏழு பேர் கைது....
ஆனால், இக்குற்றச்சாட்டை அந்தமான் அரசு மறுத்துள்ளது. ஆனால், ஜரவாஸ் பகுதியில் அத்துமீறி நுழைந்ததற்காக ஏழு வேட்டைக்காரர்கள் கைது செய்யப் பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், இதுவரை அவர்கள் மீது பாலியல் புகார்கள் எதுவும் வரவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.