ஆந்திரா 'அரவிந்த் கெஜ்ரிவால்'? தனி கட்சி தொடங்கிய 'சிபிஐ' லட்சுமி நாராயணா- நெருக்கடியில் ஜெகன்?
விசாகப்பட்டினம்: ஆந்திரா சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் சிபிஐ முன்னாள் இணை இயக்குநர் லட்சுமி நாராயணா, ஜெய் பாரத் தேசிய கட்சி (Jai Bharat National Party) தொடங்கி உள்ளார். ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம், ஜனசேனாவுக்கு கடும் சவாலாக ஜெய் பாரத் கட்சி உருவெடுக்குமா? என்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.
ஆந்திரா மாநில சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான களப் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் இறங்கி உள்ளன. லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரையில் ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெருவெற்றியைப் பெறும் என்பதுதான் தேர்தல் கருத்து கணிப்புகளின் முடிவுகள்.

ஜெகன் மோகன் ரெட்டி: ஆனால் ஆந்திரா சட்டசபை தேர்தல் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சவாலானதாக இருக்கக் கூடும் என்றே தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அண்டை மாநிலமான தெலுங்கானாவில் 2 முறை ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் இந்த முறை தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்பதை அலசி ஆராய்ந்து அதற்கேற்ப வியூகங்களை வகுத்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. குறிப்பாக அதிருப்தியில் இருக்கும் சிட்டிங் எம்.எல்.ஏக்களை கழற்றிவிட்டு புதிய முகங்களை வேட்பாளர்களாக நிறுத்துவதில் தீவிரமாக இருக்கிறார் ஜெகன் என கூறப்படுகிறது.
சந்திரபாபு பிளஸ் பிகே கூட்டணி: ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்துவதற்காக சந்திரபாபு நாயுடு, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடி உள்ளார். இது தொடர்பான ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலையில் பாஜக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் இடம் பெறவில்லை. ஆனாலும் தெலுங்குதேசம் கட்சியின் கூட்டணி கட்சியான ஜனசேனா, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இதனால் தெலுங்குதேசம், பாஜக, ஜனசேனா கூட்டணிக்கே சாத்தியம் உள்ளது. இந்த களத்தில் காங்கிரஸும் இடதுசாரிகளும் பெயரளவுக்கு இருக்கின்றன.
யார் இந்த லட்சுமி நாராயணா?: இந்த நிலையில் ஆந்திரா அரசியலில் புதிய வரவாக, சிபிஐ முன்னாள் இணை இயக்குநர் லட்சுமி நாராயணா, ஜெய் பாரத் தேசிய கட்சி (Jai Bharat National Party) என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். சிபிஐ அதிகாரியாக இருந்த காலத்தில் கர்நாடகா சுரங்க மாஃபியாக்கள் ரெட்டி சகோதரர்களை சிறைக்கு அனுப்பியவர்; ஜெகன் மோகன் ரெட்டியை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கைது செய்தவர். நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனாவில் முதலில் இணைந்திருந்த லட்சுமி நாராயணா பின்னர் அக்கட்சியில் இருந்து தனிக்கட்சியை தொடங்கி உள்ளார். 2019 லோக்சபா தேர்தலில் விசாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் லட்சுமி நாராயணா. 2020-ம் ஆண்டு ஜனசேனாவில் அவர் வெளியேறினார்.
கெஜ்ரிவால் பாணி: அரசு அதிகாரியாக இருந்து பின்னர் ஆம் ஆத்மி எனும் தனிக் கட்சி தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது டெல்லி முதல்வராக இருக்கிறார். பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை முன் மாதிரியாக கொண்டே சிபிஐ மாஜி அதிகாரி லட்சுமி நாராயணா, ஆந்திராவில் தனிக் கட்சியாக தொடங்கி இருக்கிறார். இதே ஆந்திராவில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயப்பிரகாஷ் நாராயணா, லோக் சட்டா கட்சியை தொடங்கினார். அவரால் எம்.எல்.ஏ.வாக முடிந்ததே தவிர ஆந்திரா அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. தற்போது களத்துக்கு வந்துள்ள ஜேடி எனும் லட்சுமி நாராயணாவும் சாதிக்க முடியாமல் போனாலும் பல தொகுதிகளில் பிரதான கட்சிகளுக்கான வாக்குகளை பிரிக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்கின்றனர் ஆந்திரா மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications