2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும்- சந்திரபாபு நாயுடு
அமராவதி: ஆந்திர மாநில உள்ளாட்சித் தேர்தலில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள்தான் போட்டியிட முடியும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை அண்மையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீக்கிய நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆந்திராவில் மக்கள் தொகை வளர்ச்சி மிக குறைவாக இருக்கிறது என்பது முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கவலை. ஆந்திராவில் முதியவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்; வீடுகளில் ஒன்று அல்லது 2 குழந்தைகள் மட்டுமே இருப்பதாலேயே முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என தெரிவித்திருந்தார் சந்திரபாபு நாயுடு.

இதனால் 2 குழந்தைகளுக்கு மேல் கூடுதலாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்; அப்படி 2 குழந்தைகளுக்கு மேல் குழந்தைகளைப் பெறும் தம்பதிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார். அத்துடன் உள்ளாட்சி அமைப்புகளில் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் போட்டியிட விதிக்கப்பட்ட தடையையும் கூட ரத்து செய்திருந்தார் சந்திரபாபு நாயுடு.
இந்த நிலையில் திருப்பதி அருகே செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னர் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. இனி அப்படி இல்லை. 2 குழந்தைகளுக்கும் அதிகமாக பெற்ற தம்பதியினர் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடலாம். அப்படி அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் கவுன்சிலர்களாக, மேயர்களாக பதவியைப் பெறவும் முடியும்.
வட இந்தியாவில் குடும்ப கட்டுப்பாட்டு விகிதம் நிலையானதாக இருக்கிறது. ஒரு குழந்தையைப் பெறுகிற நிலைமைகூட தற்போது மாறி வருகிறது. இருவரும் சம்பாதித்தாலும் குழந்தையே தேவை இல்லை என்கிற முடிவிலும் சில தம்பதிகள் இருக்கின்றனர். இது மக்கள் தொகையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இப்படி செய்ததால் பணிகளுக்கு நாம் செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது. நமது நாட்டிலும் அப்படியான ஒரு நிலைமை வந்துவிடக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications