ஆந்திராவில் அதிகாலை 6 மணிக்கே வீடு தேடி வந்த பென்சன்.. முதியோர்-ஊனமுற்றோர் இன்ப அதிர்ச்சி
அமராவதி: ஆந்திராவில் முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு வீடு தேடி வந்து பென்சன் அளிக்கும் திட்டம் மார்ச் 1ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவில் முதியோர்- மற்றும் ஊனமுற்றோருக்கு வீடு தேடி வந்து பென்சன் அளிக்கும் திட்டம் (ysr pension kanuka scheme) நடைமுறைப்படுத்தப்படும் என்றார். அதன்படி முதியோர் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு வீடு தேடி சென்று பென்சன் வழங்கும் திட்டம் இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.
பென்சன் வழங்குவதற்கு என்றே நியமிக்கப்பட்ட ஊழியர்கள் இன்று அதிகாலை 6 மணிக்கே ஊழியர்கள், பென்சன் வாங்கும் முதியோர், ஊனமுற்றோரின் வீடுகளுக்கு தேடித்தேடி சென்று அவர்களுக்கான பென்ஷன் தொகையை வழங்கினார்கள். 50 வீடுகளுக்கு ஒரு தன்னார்வலர்கள் என்ற ரீதியில் மொத்தம் 37.5 லட்சம் பேருக்கு இன்று ஒரே நாளில் பென்சன் வழங்கப்பட்டது. நாளை மற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் முதியோர் ஊனமுற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்பு பென்ஷன் தொகை வாங்க கிராம ஊராட்சி முதல் நகராட்சி அலுவலங்களில் மக்கள் காத்துகிடந்தனர். கொளுத்தும் வெயில் அல்லது மழையில் நின்று பென்ஷன் வாங்கி வந்தார்கள். சில நேரங்களில் இன்று கிடையாது நாளைக்கு வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விடுவார்கள். இப்படி அதிகாரிகள் முதியோர்களை பென்சனுக்காக பலமுறை அலைகழித்து வந்தார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் சில ஊர்களில் முதியோர் உதவி தொகை வாங்க பேருந்தில் அல்லது ஆட்டோவில் பயணம் செய்தெல்லாம் வரவேண்டிய நிலை இருந்துவந்தது. இதை உணர்ந்தே ஜெகன் மோகன்ரெட்டி வீடு தேடி பென்சன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்திட்டத்தின் மூலம் இன்று வீட்டிலேயே பென்சன் தொகையை பெற்ற மக்கள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நன்றி தெரிவித்தனர்.
ஆந்திராவில் 60வயதை கடந்த முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர் என 54,64 லட்சம் மக்களுக்கு இன்று முதல் மாதந்தோறும வீடு தேடி சென்று பென்சன் வழங்கப்படுகிறது. முதியோருக்கு பென்சனாக 1384 ரூபாய் வழங்குகிறது அரசு. ஊனமுற்றோருக்கு மாதம் ரூ.3000 உதவி தொகை வழங்கப்படுகிறது.