ஆந்திராவில் மனைவி, கள்ளக்காதலன் கொலை- வெட்டப்பட்ட தலைகளோடு போலீசில் சரணடைந்த விவசாயி
நகரி: ஆந்திராவில் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை வெட்டிக் கொலை செய்த விவசாயி, வெட்டப்பட்ட தலைகளோடு போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கோபால பாளையத்தைச் சேர்ந்தவர் குண்டண்ணா. விவசாயியான குண்டண்ணாவின் மனைவி ஜானகியம்மா. இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஜானகியம்மாவுக்கும், அவரது உறவினரான நாராயணன் என்பவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை குண்டண்ணா கண்டித்துள்ளார். ஆனபோதும், கணவரின் பேச்சைக் கேட்காத ஜானகியம்மா, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள நாராயணனுடன் குடித்தனம் நடத்த தொடங்கினார்.
மனைவியின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த குண்டண்ணா, மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி, நேற்று வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜானகியம்மாவையும், அவரது காதலர் நாராயணணையும் குண்டண்ணா அரிவாளால் தலையை வெட்டி கொலை செய்தார்.
பின்னர் 2 பேரின் தலைகளையும் தனித்தனியாக துணியில் கட்டி, அதனை காவடி போல் சுமந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாடேறு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார் குண்டண்ணா.
குண்டண்ணாவைக் கைது செய்த போலீசார், மேற்கொண்டு அவர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜானகியம்மா, நாராயணன் ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றினர்.