கொரோனாவோடு வாழ பழகனும்.. ஊரடங்கிற்கு பிறகு பஸ் பயணம் இப்படித்தான்.. மாற்றியமைக்கப்படும் சீட்கள்
விஜயவாடா: கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ரயில் போக்குவரத்து துவங்கி விட்டது. அடுத்து விமான போக்குவரத்து துவங்க போகிறது என்கிறார்கள். மிச்சமிருப்பது பஸ் போக்குவரத்துதான். அதுவும் மே 17ஆம் தேதிக்கு பிறகு இயக்கப்படும் என்று தெரிகிறது.
அதேநேரம் வைரசோடு வாழ பழக வேண்டியிருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதால் அதை எப்படி வாழ்வது என்பதில் அனைத்து மாநில அரசுகளும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.
இப்படித்தான், ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம், தனது சொகுசு பஸ் இருக்கைகளை மாற்றி அமைத்துள்ளது. பொதுவாக செமி ஸ்லீப்பர் என்று அழைக்க கூடிய சொகுசு பஸ்களில் 36 சீட்டுகள் இருக்கும்.

3 வரிசை சீட்
இந்தப் பக்கம் இரண்டு சீட், மறு பக்கம் இரண்டு சீட், என்ற வகையில் அவை இருக்கும். ஆனால், இவ்வாறு இனிமேல் பயணித்தால் மக்கள் அருகருகே நெருங்கி இருக்க நேரிடும். இது நோய் தொற்றுக்கு வழி வகுத்து விடும் என்ற அச்சம் காரணமாக, பஸ்களில் பயணிக்க மக்கள் முன்வர மாட்டார்கள். எனவே 3 Row என்ற அளவில் சீட்டுகள் பிரித்து அமைக்கப்பட்டுள்ளன.

26 சீட்டுகள்தான்
இப்படி அமைக்கும் போது மொத்தம் 26 சீட்டுகள் மட்டுமே அமைக்க முடிகிறது. ஆனால் சமூக இடைவெளி அவசியம் என்பதால் விஜயவாடா நகரில் உள்ள அரசு பேருந்து டெப்போ இது போன்ற வடிவமைப்புகளை பஸ்களில் ஏற்படுத்தியுள்ளது. மே 18ம் தேதிக்கு முன்பாக 100 பேருந்துகள் இவ்வாறு மாற்றியமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுத்தம் செய்வது எப்படி
அதேநேரம் இந்த இருக்கையில் பயணித்த ஒரு பயணி, இறங்கிச் சென்ற பிறகு, இன்னொரு பேருந்து நிலையத்தில் ஏறக்கூடிய பயணி அதை இருக்கையில் அமர்ந்தால், நோய்கள் பரவும் வாய்ப்பு இருக்கிறதே, என்ற கேள்வி எழாமல் இல்லை. ஒரு பயணி இறங்கிச் சென்றதும் அந்த சீட்டு முழுக்க கிருமி நாசினி போட்டு சுத்தப்படுத்த படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி செய்தாலும், அரையும் குறையுமாக நடத்துனர் அவசரத்தில் செய்தால் பலன் கிடைக்குமா, இதற்கெல்லாம் விடை தெரியவில்லை.

கேரளாவில் டாக்சி
அதேநேரம் ஏசி வசதி செய்யப்பட்ட பேருந்துகள் இப்போதைக்கு இயக்கப்பட மாட்டாது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. ஏற்கெனவே, கேரள மாநிலம் கொச்சி நகரில் டாக்சிகள் ஃபைபர் கண்ணாடி இழைகளால் டிரைவர் மற்றும் பயணிகள் ஆகியோருக்கு இடையே இடைவெளி ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போது, ஆந்திராவில், பஸ்களிலும் புது வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து
ஒவ்வொரு மாநிலமும் இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துதான் பொது போக்குவரத்தை அமல்படுத்தும் நிலை உருவாகி உள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது மட்டும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே முதியவர்கள் இந்த விஷயத்தில் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது மட்டும் உறுதி.












Click it and Unblock the Notifications