நீங்களும் இந்தியை எதிர்த்தீங்களே? கனிமொழி போட்டபோடு.. ஓடிவந்து பவன் கல்யாண் விளக்கம்! அது வேறயாம்
அமராவதி: இந்தியை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார். இதற்கு கனிமொழி எம்பி, ‛‛2017ம் ஆண்டு பவன் கல்யாணின் இந்தி எதிர்ப்பு தொடர்பான கட்டுரையை பகிர்ந்து, கோ-பேக் இந்தி என்று கோஷமிட்டிருக்கிறார்'' என்று கூறி அதற்கான ஆதாரத்தை வெளியிட்டார். இதனால் பதறிப்போன பவன் கல்யாண் இன்று அவசரஅவசரமாக தமிழ் உள்பட 4 மொழிகளில் தனது இந்தி நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று தனது ஜனசேனா கட்சியின் 12ம் ஆண்டு விழாவில் பேசினார். அப்போது அவர் இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை விமர்சனம் செய்தார்.

இதுதொடர்பாக பவன் கல்யாண், ‛‛இந்தியாவுக்கு தமிழ் உள்பட பல மொழிகள் தேவையாக உள்ளது. தமிழ்நாடு அரசியல்வாதிகள் தங்களின்திரைப்படங்களை பணத்துக்காக இந்தியில் டப்பிங் செய்துவிட்டு இந்தியை எதிர்ப்பது ஏன்? என்று எனக்கு புரியவில்லை. பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்பும் அவர்கள் ஏன் இந்தியை ஏற்க மறுக்கின்றனர்? இது எந்த மாதிரியான லாஜிக்?'' என்று விமர்சனம் செய்துள்ளார்.
இதன்மூலம் வாய் கொடுத்து வாங்கி கட்டினார் பவன் கல்யாண். அவரது பேச்சுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று கடுமையாக பதிலடி கொடுத்தனர். குறிப்பாக கனிமொழி எம்பி, ‛‛மொழிகளை கடந்து திரைப்படங்களை ரசிக்க தொழில்நுட்பம் கைகொடுப்பதாக பதிலடி கொடுத்துள்ளார். அதேபோல் 2017ஆம் ஆண்டு பவன் கல்யாண், இந்தி எதிர்ப்பு தொடர்பான கட்டுரையை பகிர்ந்து, கோ-பேக் இந்தி என்று கோஷமிட்டிருக்கிறார். ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பின், இந்திக்கு ஆதரவாக பேசி வருகிறார்'' என்று கூறியதோடு அதற்கான ஆதாரத்தை வெளியிட்டார்.
இந்நிலையில் தான் தனது மொழி நிலைப்பாடு தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இப்போது முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலத்தில் 3 பதிவுகளை செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதும், ஒரு மொழியை கண்மூடித்தனமாக எதிர்ப்பதும்-இவை இரண்டுமே இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உகந்தவை அல்ல.
நான் ஹிந்தியை ஒரு மொழியாக ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால், அதை கட்டாயமாக்குவதற்காக முன்பு எடுக்கப்பட்ட முயற்சிக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தேன். தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP 2020) ஹிந்தியை எந்த வகையிலும் கட்டாயமாக்கவில்லை என்ற நிலையில், அதைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புவது அரசியல் நோக்கத்திற்காக மக்களை தவறாக வழிநடத்தும் தந்திரம் மட்டுமே.
NEP 2020-ன் படி, மாணவர்கள் தங்கள் தாய்மொழியுடன் சேர்த்து எந்த இரண்டு இந்திய மொழிகளையும் (அவை ஹிந்தியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை) மற்றும் ஒரு வெளிநாட்டு மொழியையும் தேர்வு செய்யும் சுதந்திரம் பெற்றுள்ளனர். அவர்கள் ஹிந்தியை படிக்க விரும்பவில்லை என்றால், அதற்குப் பதிலாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, அஸ்ஸாமி, காஷ்மிரி, ஓடியா, வங்காள மொழி, பஞ்சாபி, சிந்தி, போடோ, டோகரி, கொங்கணி, மைதிலி, மணிப்பூரி மொழி, நேபாளி, சந்தாலி, உருது உள்ளிட்ட எந்த இந்திய மொழிகளையும் தேர்வு செய்யலாம்.
பன்மொழிக் கொள்கை மாணவர்களுக்கு விருப்பத்தேர்வையும், கல்விச் சுதந்தரத்தையும் வழங்குகிறது. இது தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதோடு, இந்தியாவின் மொழிப் பன்மையை பாதுகாக்கும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை தவறாக விளக்கி, அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துவது, அல்லது பவன் கல்யாண் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார் எனத் தவறாக கூறுவது-மொழிக் கொள்கையைப் பற்றிய புரிதலின்மையையே காட்டுகிறது. ஜனசேனா கட்சி மொழித் தேர்வுச் சுதந்திரமும், கல்விச் சுதந்தரமும் ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது என்பதில் உறுதியாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications