வெடித்து சிதறிய ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு.. திடீர் எரிவாயு கசிவால்.. ஆந்திராவில் உச்சக்கட்ட பதற்றம்!
விசாகப்பட்டினம்: ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணற்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. கோனசீமா மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு பெரும் எரிவாயுக் கசிவால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.. பலத்த வெடிப்புடன் கச்சா எண்ணெய் கலந்த எரிவாயு வெடித்துச் சிதறியதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி அருகே உள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
பொதுவாக ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களில் எண்ணெய்க் கிணறு அமைக்கப்படும்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இருப்பினும், அதையும் தாண்டி சில நேரங்களில் மோசமான விபத்து ஏற்படும். அப்படியொரு எதிர்பாராத விபத்து தான் ஆந்திராவில் ஏற்பட்டுள்ளது.

எரிவாயு கசிவு
ஆந்திரப் பிரதேசத்தின் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் அதாவது ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய்க் கிணற்றில் எரிவாயு கசிந்து. ஓஎன்ஜிசி காண்டிராக்டர் ஒருவரால் இயக்கப்படும் இந்த கிணற்றில் திடீரென எரிவாயு வெடிப்பு ஏற்பட்டுத் தீப்பிடித்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சம்பந்தப்பட்ட எண்ணெய்க் கிணற்றில் ஏற்கனவே சில காரணங்களுக்காக உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது. அங்கு ரிப்பேர் பணிகள் நடந்து வந்த நிலையில், அப்போது எதிர்பாராத விதமாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கச்சா எண்ணெய் கலந்த எரிவாயு அங்கு வெடித்துச் சிதறியது. அடர்ந்த எரிவாயு புகை குடியிருப்புப் பகுதிக்குள் பரவியதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகாரிகள் அருகிலுள்ள வீடுகளில் இருந்து மக்களை அப்புறப்படுத்தினர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்..
என்ன நடந்தது
பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது, கச்சா எண்ணெய்யுடன் கலந்த அதிக அளவிலான எரிவாயு பல அடி உயரத்திற்கு வெடித்துச் சிதறியுள்ளது. உள்ளூர் மக்கள் உடனடியாக ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்குக் கசிவு குறித்துத் தகவல் கொடுத்ததும், காவல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ராஜோல் வட்டார ஆய்வாளர் நரேஷ் குமார் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
காரணம் தெரியவில்லை
வாயுக் கசிவு ஏற்பட்டதற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலும், இதனால் எந்தளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளன என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அங்கு எரிவாயு கசிவை நிறுத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
முதல்வர் அறிவுறுத்தல்
இது தொடர்பாக ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓஎன்ஜிசி துளையிடும் தளத்தில் ஏற்பட்ட இந்த எரிவாயு கசிவு குறித்து சந்திரபாபு நாயுடு கேட்டறிந்தார். நிலைமையை ஆய்வு செய்ய அமைச்சர்கள் அட்சன்னாயுடு, வாசசெட்டி சுபாஷ் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவர் பேசினார்.
சம்பவம் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் ஏற்கனவே தொடர்பில் இருப்பதாகவும், நிவாரணப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் முதல்வரிடம் அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும், கிராம மக்களுக்கு எந்தவொரு சிரமமும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் முதல்வர் அறிவுறுத்தினார்,
இச்சம்பவத்திற்குப் பிறகு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராகுல் மீனா, எம்பி காந்தி ஹரிஷ் பலயோகி மற்றும் ராஜோல் எம்எல்ஏ தேவா வரப்பிரசாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.












Click it and Unblock the Notifications