சந்திரபாபு நாயுடு சொல்லியும் தீராத பெட்ரோல், டீசல் பிரச்சனை.. ஆந்திராவில் கடும் தட்டுப்பாடு.. என்ன காரணம்?
அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த வார இறுதியில் (சனி, ஞாயிற்றுக்கிழமை) நிலைமை மிகவும் மோசமடைந்ததால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் எரிபொருள் நிலையங்களில் "No Stock" என்ற பலகைகளை வைத்துள்ளதால் மக்கள் பெட்ரோல், டீசல் வாங்க அலைந்து வருகின்றனர்.
இதன் எதிரொலியாக ஆந்திராவில் பல எரிபொருள் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தற்போது இயங்கி வரும் பெட்ரோல் நிலையங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்கின்றன. அதாவது லாரிகளுக்கு ரூ.5,000 வரை, டிராக்டர்களுக்கு ரூ.1,500 வரை, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.200 வரை மட்டுமே எரிபொருள் வழங்கப்படுகிறது. இது பொதுமக்களிடயே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் அதிருப்தியை உணர்ந்த ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவசர உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். எரிபொருள் விநியோகத்தை உடனடியாக அதிகரிக்கவும், டிப்போக்கள் மற்றும் ரீடைல் விற்பனை நிலையங்கள் இடையே தடையின்றி விநியோகம் நடைபெறவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் விவசாயிகளுக்கு கூப்பன் முறையில் எரிபொருள் வழங்கி விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் பார்க்கவும் அறிவுறுத்தினார்.
ஆனால் இன்றும் பெட்ரோல், டீசல் பிரச்சினை தீர்ந்தபாடு இல்லை. இந்த பிரச்சனைக்கு அடிப்படை காரணம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் விநியோகத்தை குறைத்ததே இத்தகைய பிரச்சனை உருவாக அடிப்படை காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் எரிபொருள் அமைப்பில் பற்றாக்குறை இல்லை என்றும், ஆந்திர மாநிலத்திற்கான சப்ளையில் ஏற்பட்ட தற்காலிக லாஜிஸ்டிக் மற்றும் விநியோகச் சங்கிலி பிரச்சனைகளே இதற்குக் காரணம் என்றும் எண்ணெய்த் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் பெட்ரோல், டீசல் சப்ளை விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில அரசு, மாநிலம் முழுவதும் கணக்கெடுத்ததில் சுமார் 421 பெட்ரோல் நிலையங்கள் எரிபொருள் இருப்பு இல்லாமல் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக கூறியுள்ளது. ஆனால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் இதை மறுத்து, கிட்டத்தட்ட 1,500 நிலையங்கள் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
இந்த எரிபொருள் தட்டுப்பாடு மூலம் பொதுமக்கள் மட்டுமின்றி, போக்குவரத்துத் துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நான்கு நாட்களில் சென்றடையும் சரக்குகள் இப்போது ஆறு நாட்கள் வரை ஆகின்றன. இதனால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.
எரிபொருள் நிலையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், நியாயமான விநியோகத்தை உறுதி செய்யவும் ஆந்திர மாநில அரசு கூட்டம் நிறைந்த பெட்ரோல் நிலையங்களில் போலீஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் கள்ள சந்தையில் விற்பதையும், தேவைக்கு அதிகமாக சேர்த்து வைப்பதையும் தடுக்க சிசிடிவி கண்காணிப்பு ஆந்திரா மாநிலம் முழுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications