நாளந்தா வாஸ்து நிபுணர் இவர்தான்! யார் இந்த பண்டிட் வெங்கட ராமகிருஷ்ண ராஜு!
விஜயவாடா: பீகார் மாநிலத்தில் ரூ.1,749 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நாளந்தா பல்கலைக்கழக கட்டடத்தை வாஸ்து சாஸ்திரத்தின் படியும் இதனைக் கட்டித் தந்துள்ளார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வாஸ்து நிபுணர் ஒருவர். திரை மறைவில் இவரது உழைப்பு இருந்துள்ள விசயம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பீகார் மாநிலம் பாட்னா அருகே நாளந்தா மாவட்டத்தில் உள்ள நகரம் ராஜ்கிரி. இங்கு அமைந்துள்ள நாளந்தா பல்கலைக்கழக புதிய கட்டடங்களைக் கடந்த புதன் கிழமை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நாளந்தா பல்கலைக்கழகத்திற்கும் ஆந்திராவுடன் மறைமுகமான ஒரு தொடர்பு உள்ளது. அந்தத் தொடர்பு என்ன என்பது பற்றி பலருக்கும் தெரியாது. இந்த நாளந்தா பல்கலைக்கழகம் பௌத்த மதத்தின் அடையாளமாக முன்வைக்கப்படுகிறது. சுமார்1600 ஆண்டுகளுக்கு முன்பு 108 பாடங்களைக் கொண்ட உலகின் முதல் உண்டு உறங்கிப் படிக்கும் பல்கலைக்கழகமாக இயங்கி வந்தது.

அதன்பின்னர் இந்தப் பல்கலைக்கழகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அதனால் அங்கு இருந்த 9 மில்லியன் ஓலைச்சுவடிகள் தீக்கு இரையாகின. அங்கிருந்த நூல்நிலையம் மூன்று மாதங்கள் வரை நிற்காமல் இரவு பகலாக எரிந்தது என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
பக்தியார் கில்ஜி இந்தப் பல்கலைக்கழகத்தை இடித்துத் தள்ளினார் என்பது வரலாறு. அவர் இடித்துப் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பௌத்த கல்விக் களஞ்சியம் புதுப்பிக்கப்பட்டது. அதன் மூலம் இன்று சர்வதேச மாணவர்கள் கல்வி கற்கும் களமாக இது இருந்து வருகிறது. வட மாநிலங்களில் உள்ளவர்கள் பழங்கால வாஸ்து கலைகளில் நிபுணத்துவம் பெறத் தென் மாநிலங்களில் உள்ள நபர்களின் உதவியை நாடி வருகின்றன. அதன்படி வாஸ்து கலையில் நிபுணத்துவம் கொண்ட ஒருவரை இந்தக் கட்டடக் கலையை வடிவமைக்க அழைத்துள்ளனர். அந்த வாஸ்து நிபுணர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக சிராலாவைச் சேர்ந்த சிதம்பர சாஸ்திரிதான் அயோத்தி ராமர் கோவிலைத் திறப்பதற்கு மூல மந்திரம் சொல்ல அழைக்கப்பட்டார். கர்நாடகாவிலிருந்துதான் ராமர் சிலை வடிக்கக் கல் கொண்டு செல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து இப்போது , ராமகிருஷ்ண ராஜு என்பவர்தான் நாளந்தி பல்கலைக்கழக கட்டடங்களைக் கட்டுவதற்கான வாஸ்து பார்த்துக் கொடுத்தார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள பிரகதி நகரில்தான் ராமகிருஷ்ண ராஜு வசித்து வருகிறார். இவரைக் கடந்த செப்டம்பர் 13, 2019 ஆம் ஆண்டு நாளந்தா பல்கலைக்கழக அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக வாஸ்து நிபுணராக நியமித்துள்ளனர். திட்டக் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இவருக்கு இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பணி நியமன ஆணைகளை அப்போதைய பதிவாளர் சஞ்சய் பட்நாகர் வழங்கினார். இவர் நீர், நிலம், காற்று எனப் பஞ்ச பூதங்கள் அடிப்படையில் கட்டடங்களை எப்படி வடிவமைப்பது என்று தினந்தோறும் வழிகாட்டுதல் வழங்கி வந்துள்ளார்.
இந்திய பௌத்த கட்டடக் கலை பாணிகளின்படி எப்படி கட்டடங்களைக் கட்டுவது என்றும் அதன் மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாமல் இயற்கையான வடிவில் வகுப்பறைகளை எப்படி உருவாக்குவது என்றும் இவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இது பற்றி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுனைனா சிங் தி இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஊடகத்திற்குப் பேசுகையில், "பீகார் அரசு ஒதுக்கிய 450 ஏக்கர் நிலத்தில், 13 ஏக்கரில் ஏரிகள் இருந்தது. ஆகவே, அதைக் கெடாமல் அப்படியே பாதுகாத்து கார்பன் நச்சுத்தன்மையைக் குறைக்கும்படி நாங்கள் வளாகம் கட்ட முடிவு செய்தோம்.
இந்தப் புதிய கட்டடமானது பழங்கால கட்டட மாதிரியைப் பின்பற்றிக் கட்டப்பட்டுள்ளது. நாளந்தா என்பது வரலாற்று ரீதியாக வாஸ்து சாஸ்திரத்தில் உலகப் புகழைக் கொண்ட அறிவுக் களஞ்சியம். ஆகவேதான், நாங்கள் அதில் நிபுணத்துவம் கொண்ட ராமகிருஷ்ண ராஜுவை அழைத்தோம். அவருடைய ஆதரவு பல்கலைக்கழக கட்டடத்தின் ஒவ்வொரு மூலையிலும் மறைந்துள்ளது. அந்தக் கட்டடங்கள் இவரால்தான் வாஸ்து கலையால் பிரதிபலிக்கின்றன. நான் தான் அவரிடம் இருந்து நேரடியாக உதவியைப் பெற்றேன். அவர் புவி மண்டல கொள்கைக்கு ஏற்ப தனது வாஸ்து சாஸ்திர அறிவின் மூலம் அவற்றைத் திறம்பட நடுநிலையாக நின்று செய்து முடித்தார்" எனக் கூறியுள்ளார்.

ராஜு தன் இளம் வயதிலேயே, பிரகாசம் மாவட்டம் சிராலாவில் உள்ள அவரு சுப்பிரமணியம் என்ற நிபுணரிடம் வாஸ்து கலையின் அடிப்படைகளைக் கற்றுக் கொண்டுள்ளார். பின்னர், தமிழ்நாடு, குஜராத், ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்குச் சென்று மேம்படுத்தப்பட்ட வாஸ்து நுட்பங்களை முறைப்படி படித்துள்ளார்.
இது பற்றிப் பேசிய வாஸ்து நிபுணர் ராஜு, "இதைப்போன்ற ஒரு சிறந்த உலகளாவிய திட்டத்தில் எனது பங்கு இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. பல்கலைக்கழக வளாக கட்டிடக்கலை 2014 இல் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே நான் கட்டிடக்கலை வடிவமைப்பில் தலையிடவில்லை. குறிப்பாக அலுவலக அறைகள், வகுப்பறைகள் மற்றும் விடுதி அறைகளில் மட்டுமே வாஸ்து பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஊழியர்களின் குடியிருப்புகள், டீன் குடியிருப்புகள், துணைவேந்தர் பங்களா, நூலகம், யோகா மையம் ஆகியவை எனது பரிந்துரைகளின்படி கட்டப்பட்டன" என்கிறார்.
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள மந்தேனாவரி பாலம் கிராமத்தைச் சேர்ந்த பண்டிட் முதுனூரி வெங்கட ராமகிருஷ்ண ராஜு ஒரு பிரபல வாஸ்து நிபுணர். இப்போது நாளந்தா பல்கலைக்கழகம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications