ஆந்திரா: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் யாக சாலையில் திடீர் தீ விபத்து
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. யாகசாலையில் நடந்த பூஜையின் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக யாக சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் கடந்த 2010-ம் ஆண்டு இடிந்து விழுந்தது. இதனையடுத்து புதிய ராஜகோபுரம் கட்டும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்தது. பணிகள் நிறைவடைந்ததையொட்டி வரும் 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்காக கோயிலில் உள்ள யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று காலை வழக்கம்போல யாக பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் வேகமாக பரவிய தீயால் அப்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் 3 தண்ணீர் லாரிகளின் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் ஏராளமான சிவாச்சாரியார்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். யாகசாலையில் நடந்த பூஜையின் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications