திருப்பதியில் செம்மரக் கடத்தல் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு.. தமிழர் ஒருவர் கைது
திருப்பதி அருகே செம்மரம் வெட்டியதாக தமிழர் ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி: திருப்பதி அருகே ஸ்ரீ வாரி மெட்டு வனப்பகுதியில் செம்மரம் வெட்டியவர்களை பிடிப்பதற்காக அதிரடிப்படை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
திருப்பதி அருகே உள்ள ஸ்ரீ வாரி மெட்டு வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிரடிப்படை போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது கடத்தல் கும்பல் ஒன்று செம்மரம் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனிடையே போலீசார் வருவதை பார்த்த அந்தக் கும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. தாக்குதலைத் தொடர்ந்து அதிரடிப்படை போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி சூடு நடத்தியதால் கடத்தல் கும்பல் அங்கியிருந்து தப்பியோடியது.
மேலும் கடத்தலில் ஈடுபட்டதாக திருப்பத்தூரைச் சேர்ந்த ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவரிடம் இருந்து ரூ 15 லட்சம் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.