நீரவ் மோடி மீது செம காண்டில் இருக்கும் மும்பைவாலாக்கள்... ஹோலிக்கு என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா?
ஹோலி பண்டிகையின் போது வங்கியில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடியின் உருவபொம்மையை எரிக்க மும்பை பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளனர்.
மும்பை: மும்பையின் வொர்லி பகுதியைச் சேர்ந்த பிடிடி குடியிருப்பு வாசிகள் ஹோலி பண்டிகையின் போது தொழிலதிபர் நீரவ் மோடியின் 58 அடி உயர உருவபொம்மையை எரிக்க முடிவு செய்துள்ளனர். ஹோலியின் போது கெட்ட விஷயங்கள் வெளியேறுவதை உணர்த்தும் விதமாக இதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
மும்பையின் வொர்லி பகுதியைச் சேர்ந்த பிடிடி சாவல் குடியிருப்பு பகுதி மக்கள் சேர்ந்து 58 அடி உயர தொழிலதிபர் நீரவ் மோடியின் உருவபொம்மையை உருவாக்கியுள்ளனர். ஹோலி பண்டிகையை இந்த ஆண்டு வித்தியாசமான முறையில் கொண்டாடும் விதமாக இந்த உருவபொம்மையை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஹோலியின் போது கெட்ட விஷயங்களை அகன்று நல்ல விஷயங்கள் அனைவர் வாழ்விலும் ஏற்பட வேண்டும் என்று மக்கள் வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இதே போன்று மரத்துண்டுகளை எரிய விட்டு அதில் தீய விஷயங்கள் அழித்தொழிக்கப்படுவதாக நம்புகின்றனர்.
கடந்த 8 ஆண்டுகளாக சாவல் குடியிருப்பு வாசிகள் சமூக பிரச்னை ஒன்றை முன்நிறுத்தி ஹோலி பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டும் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, குறைவான எடை கொண்ட மரத்துண்டு மற்றும் காய்ந்த சறுகுகளை வைத்து நீரவ்மோடியின் உருவபொம்மையை உருவாக்கியுள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியை மோசடி செய்து ரூ.11 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு தொழிலதிபர் நீரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார். நாட்டிற்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்திய நீரவ் மோடி ஒரு தீயசக்தி என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த வித்தியாசமான ஹோலியை கொண்டாடுகின்றனர். லிம்கா சாதனை புத்தகத்திலும் இதனை இடம்பெறச் செய்ய பிடிடி சாவல் மக்கள் திட்டமிட்டுள்ளனர். நாட்டிலேயே தாங்கள் கொண்டாடும் ஹோலி தான் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.