பழங்குடி மக்களிடம் கருத்து கேட்காமலேயே வேதாந்தா குழுமத்துக்கு ஒப்புதல் கொடுக்க நாடகமாடும் ஒடிஷா அரசு
லாஞ்சிகர்: ஒடிஷாவில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தின் விரிவாகத்துக்கு அனுமதி கொடுக்க பழங்குடி மக்களிடம் கருத்து கேட்காமலேயே உள்ளூர் மக்கள் ஆதரவு கொடுத்துவிட்டனர் என்று ஒடிஷா மாநில அரசு அறிவித்திருக்கிறது.
ஒடிஷாவின் கலஹாண்டி மற்றும் ராயகடா மாவட்டத்தில் நியாம்கிரி மலைப் பகுதி உள்ளது. இங்கு டோங்கிரியா கோந்த் என்ற "திராவிடர்" பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மலைத் தொடரில் பாக்சைட் தாது பெருமளவு உள்ளது.
இதனை வெட்டி எடுக்க வேதாந்தா குழுமத்துக்கு மாநில அரசு அனுமதி அளித்தது. இதனால் கலஹாண்டியின் லாஞ்சிகரில் வேதாந்தா குழுமத்தின் பாக்சைட் சுத்தகரிப்பு ஆலை செயல்பட தொடங்கியது.

தற்போது இந்த ஆலையை விரிவாக்கம் செய்ய வேதாந்தா குழுமம் முயற்சிக்கிறது. ஆனால் நியாம்கிரி மலையில் இருந்து பாக்சைட் தாதுவை வெட்டி எடுக்க டோங்கிரியா கோந்த் பழங்குடி மக்கள் எதிர்த்து வருகின்றனர்.
இதனால் வெளி இடங்களில் இருந்து பாக்சைட் தாதுவை வரவழைத்துக் கொண்டிருக்கிறது வேதாந்தா. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்கும் போனது.
உச்சநீதிமன்றமோ, உள்ளூர் மக்களின் கருத்தே இறுதியானது என்று கூறியது. இதனால் கருத்து கேட்பு கூட்டங்களை ஒடிஷா அரசு நடத்தியது.
ஒவ்வொரு கருத்து கேட்புக் கூட்டத்திலும் பழங்குடி இன மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு வேதாந்தா குழுமத்தை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர். இந்த நிலையில் நேற்று வேதாந்தா குழுமத்தின் விரிவாகத்துக்கு உள்ளூர் மக்கள் அனுமதி அளித்துவிட்டதாக ஒடிஷா அரசு அறிவித்தது.
இது தொடர்பான உள்ளூர் கூட்டத்தை ஆளும் பிஜூ ஜனதா தளம் தொண்டர்களை வைத்து மாவட்ட ஆட்சியர் நடத்தினார். ஆனால் இதைக் கேள்விபட்ட நூற்றுக்கணக்கான பழங்குடி மக்கள் கருத்து கேட்புக் கூட்டத்துக்கு வந்துவிட பிஜூ ஜனதா தள தொண்டர்கள் பின்வாங்கி ஓடிவிட்டனர்.
தங்களை மீறி ஒருபோதும் நியாம்கிரி மலையில் பாக்சைட் தாதுவை வெட்டி எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்பது டோங்கிரியா பழங்குடி மக்களின் திட்டவட்டமான கருத்து.












Click it and Unblock the Notifications