அவசரச் சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர அதிகாரம் இருக்கிறதாம்.. ஆவணங்களை தாக்கல் செய்தார் அஞ்சலி
ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர தனக்கு அதிகாரம் இருப்பதாக விலங்கு நல வாரிய உறுப்பினர் அஞ்சலி சர்மா கூறியுள்ளார். அதற்கான கூடுதல் ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி: ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடந்துவிடாமல் இருக்க விலங்கு நலம் என்ற பெயரில் பலர் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் அஞ்சலி சர்மா முக்கியமானவர். இவர் தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் அவசரச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர தனக்கு அதிகாரம் இருக்கிறது என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என்று கோரி பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. இந்நிலையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்று கருதிய மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் தன்னெழுச்சியான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியது. பின்பு அது நிரந்தர சட்டமாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞரான அஞ்சலி சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டம், மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்துக்கு எதிரானது அதனால் அதை ரத்து செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இந்த மனு அனுமதி பெறாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், திரும்பப் பெறக்கோரி விலங்குகள் நல வாரிய செயலாளர் ரவிக்குமார் அஞ்சலி சர்மாவிற்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், வாரியத்தின் அனுமதியில்லாமல் மனுவை தான் தாக்கல் செய்யவில்லை என்று கூறிய அஞ்சலி சர்மா, வாரிய செயலாளர் கடிதம் சட்டப்பூர்வமாக தன்னை தடுக்காது என்றும் இருப்பினும் அந்த மனுவை வாபஸ் பெற முடியாது என்றும் கூறினார்.
இதற்கிடையில், ஜல்லிக்கட்டு வழக்கில் இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் வழக்கறிஞர் அஞ்சலி சர்மா சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்திய விலங்குகள் நலவாரியம் சார்பில் மனுத்தாக்கல் செய்ய தனக்கு அனைத்து அதிகாரம் உள்ளது என்று அஞ்சலி சர்மா குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications