மத்திய அரசின் லோக்பால் மசோதா சிங்கத்தையே ஜெயிலுக்கு அனுப்பும்: கெஜ்ரிவாலுக்கு ஹசாரே பதிலடி
ராலேகான் சித்தி: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதா, எலிகளை மட்டுமல்ல சிங்கத்தையே சிறைக்கு அனுப்பும் வலிமை பெற்றது என கெஜ்ரிவாலின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் அன்னா ஹசாரே.
காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதா வேண்டி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இதற்கு முன்னர் அவரது உண்ணாவிரதப் போராட்டங்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் வாக்குறுதிகளின் அடிப்படையில் திரும்பப் பெற்றுக் கொள்ளப் பட்டது. ஆனால், இம்முறை தனது நோக்கம் நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர இருப்பதாக உறுதிமொழியுடன், தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தி பகுதியில் உள்ள யாதவ் பாபா கோவிலில் கடந்த 10-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார் ஹசாரே.

அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றியது. அந்த மசோதாவை அன்னா ஹசாரேவும் ஏற்றுக் கொண்டார். ஆனால், ஆம் ஆத்மிக் கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், ‘இது லோக்பால் அல்ல, ஜோக்பால். இதனை அன்னா ஏற்றுக் கொண்டது வருத்தமளிக்கிறது' எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதா மீதான கருத்து மோதல் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே வலுத்து வருகிறது.
மேலும், மத்திய அரசு தாக்கல் செய்த லோக்பால் ஊழல் பெருச்சாலியை மட்டும் அல்ல, ஒரு சுண்டெலியை கூட ஜெயிலுக்கு அனுப்ப முடியாது என்ற ‘ஆம் ஆத்மி' கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அன்னா ஹசாரே தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :-
நீங்கள் எலிகளை பற்றி தான் பேசுகிறீர்கள். ஆனால் சிங்கத்தையே ஜெயிலுக்கு அனுப்பும் வலிமை லோக்பால் மசோதாவுக்கு இருக்கிறது. மத்திய, மாநில அரசின் அதிகபட்ச முன்னுரிமையே லோக்பால் மசோதா தான்.இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க மசோதா. நாடு இதை நாடுகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்' என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications