சிறந்த சட்டங்களை முறையாக அமல்படுத்தாவிட்டால் போராட்டம்: அன்னா ஹசாரே
மும்பை: கிராம பஞ்சாயத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட சிறந்த சட்டங்களை முறையாக அமல்படுத்தாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவேன் என மராட்டிய முதல்வர் பிரிதிவிராஜ் சவானுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து ஊழலுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதியான அன்னா ஹசாரே, மராட்டிய முதல்வர் பிரிதிவிராஜ் சவானுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கிராம பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, அரசு பணியாளர்களை இடமாற்றம் செய்யும் விவகாரம் போன்றவற்றில் கொண்டு வரப்பட்ட சட்டங்களை மராட்டிய அரசு முறையாக அமல்படுத்தவில்லை. கிராம வளர்ச்சி மூலமே நாட்டு வளர்ச்சியை காண முடியும் என்று மகாத்மா காந்தி கூறினார். இதனால் சட்டசபை, நாடாளுமன்றத்தை விட கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அரசு பணியாளர்கள் இடமாற்ற பிரச்சினையில் 2006ம் ஆண்டு நீண்ட போராட்டத்துக்கு பிறகு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி அவசியமின்றி அரசு பணியாளர்களை 3 ஆண்டுகள் வரை இடமாற்றம் செய்ய முடியாது. ஆனால் அந்த சட்டத்தின்படி தற்போது யாரும் நடக்கவில்லை.அமைச்சர்களின் விருப்பப்படி இடமாற்றம் நடக்கிறது.
சிறந்த சட்டங்கள் நடைமுறையில் இருந்தும் அவற்றை அமல்படுத்த அரசு தவறி வருகிறது. சட்டங்களை முறையாக அமல்படுத்தாததால் பொதுமக்கள் தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு லஞ்சம், ஊழல் மலிந்து காணப்படுகிறது. இந்த நிலையில் மேற்கண்ட சட்டங்களை முறையாக அமல்படுத்தும்படி உங்களது நினைவுக்கு கொண்டு வருகிறேன். இதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் தழுவிய மக்கள் போராட்டம் நடைபெறும்' என இவ்வாறு தனது கடிதத்தில் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications