பதன்கோட்: பாதுகாப்பு தரப்பு தவறுகள் குறித்து நாட்டு மக்களுக்கு மோடி விளக்க ஏ.கே. ஆண்டனி வலியுறுத்தல்
திருவனந்தபுரம்: பதன்கோட் விமானப் படை தளத்துக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அளவுக்கு நாட்டின் பாதுகாப்பு தரப்பில் நிகழ்ந்த தவறுகள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே. ஆண்டனி வலியுறுத்தியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஏ.கே. ஆண்டனி பேசியதாவது:
பதன்கோட்டில் தாக்குதல் நடைபெற்றத்தில் மிக மோசமான வகையில் பாதுகாப்பு தரப்பில் தவறுகள் இருந்துள்ளன. இதற்காக இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? என்பதை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி சென்ற பிறகுதான் இத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்பதை நாடு அறிந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருக்க கூடாது.
கேரளா உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்கு பின்னடைவு என கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வருகைக்குப் பின்னர் நிலைமை மாறிவிட்டது. இப்போது காங்கிரஸ் உற்சாகமடைந்துள்ளது.
இவ்வாறு ஏ.கே. ஆண்டனி கூறினார்.












Click it and Unblock the Notifications