தொண்டர்கள், உறவினர்கள் கூட்டம்... இடநெருக்கடியால் அரசு பங்களாவிற்கு செல்கிறார் ஆந்திர முதல்வர்
ஹைதராபாத்: தொண்டர்கள் மற்றும் உறவினர்கள் வருகையால் வீட்டில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு பங்களாவில் குடியேற முடிவெடுத்துள்ளாராம்.
ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடுவுக்கு ஹைதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் 6 ஆயிரம் சதுரஅடியில் 3 படுக்கை அறைகள் கொண்ட சொந்த வீடு உள்ளது. முன்னர் 10 ஆண்டு காலம் முதல்வராக இருந்தபோதும், 9 ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதிலும் அவர் அரசு பங்களாவிற்குச் செல்லவில்லை. தனது சொந்த வீட்டிலேயே குடியிருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரைக் காண தொண்டர்கள் அதிகளவில் வருகின்றனர். இதற்கிடையே கர்ப்பமாக உள்ள அவரது மருமகளைப் பார்க்கவும் ஏராளமான உறவினர்கள் வீட்டிற்கு வருகின்றனர்.
இதனால், எப்போதும் அவர் வீட்டில் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே, கூட்டத்தைக் குறைக்கும் வகையில் தொண்டர்களை லேக்வியூவில் உள்ள தனது அமைச்சகம் செயல்படும் அரசு பங்களாவில் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார்.
ஆனபோதும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தனது வீட்டை விஸ்தரித்துக் கட்ட திட்டமிட்டுள்ளாராம் சந்திரபாபு நாயுடு. 10 படுக்கை அறைகள், 4 வரவேற்பு அறை, வீடியோ காம்பரன்சிங்ஹால், வெளி நாட்டு விருந்தினர்களை சந்திக்க தனி அறை, பார்வையாளர்களை சந்திக்க தனி அறை, பார்வையாளர்கள் காத்திருக்க கூடம், விசாலமான சமையல் அறை போன்ற வசதிகளுடன் கூடிய புதிய வீடு அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திரபாபு நாயுடுவின் இந்த கனவு இல்லத்தை ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்க பிரபல கட்டுமான நிறுவனத்திடம் ஒப்பந்தமும் போடப்பட்டு உள்ளது.
கட்டுமான பணி முடிவடையும் வரை லேக்வியூவில் உள்ள தனது அமைச்சக அலுவலக பங்களாவில் குடியேற சந்திரபாபு நாயுடு திட்டமிட்டு உள்ளார். இதனால், அங்குள்ள முதலமைச்சர் அலுவலகம் தலைமை செயலக கட்டிடத்துக்கு மாறுகிறது.
இதன்படி, லேக்வியூ பங்களாவை சந்திரபாபு நாயுடுவின் மனைவி, மகன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு, அதில் சில மாற்றங்களை செய்ய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். வருகிற டிசம்பர் மாதம் சந்திரபாபு நாயுடு புதிய வீட்டுக்கு குடியேறுவார் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, வீட்டை மாற்றாமல் கூடுதலாக சில அறைகள் மற்றும் வரவேற்பு அறைகளை மட்டும் கட்டி சொந்த வீட்டிலேயே குடியிருக்கலாம் என்ற யோசனையிலும் சந்திரபாபு நாயுடு இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் எது நிஜமாகப் போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications