பேச்சுவார்த்தை தோல்வி- சீமாந்திராவில் தொடர் வேலைநிறுத்தம்! முதல்வர் மாற்றம்?
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுடன் மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.
தெலுங்கானாவுக்கு எதிராக 70 நாட்களுக்கு மேலாக கடலோர ஆந்திரா, ராயலசீமாவை உள்ளடக்கிய சீமாந்திராவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக மின்வாரிய ஊழியர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளதால் மின் உற்பத்தி முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரயில் சேவை, மருத்துவ சேவைகள் அனைத்தும் முற்றாக முடங்கிப்போயுள்ளன. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் என்று கூறப்பட்டது.
ஆனால் இதை மத்திய அரசு மறுத்துள்ளது. அத்துடன் முதல்வர் கிரண்குமார் ரெட்டியே போராட்டங்களைத் தூண்டிவிடுவதாகவும் காங்கிரஸ் கருதுவதாகத் தெரிகிறது. இதனாலேயே திடீரென அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

நேற்றும் இன்றும் அவர் நடத்திய பேச்சுவார்த்தையால் எந்த ஒரு பயனும் ஏற்படவில்லை. இதனால் மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டியை காங்கிரஸ் மேலிடம் மாற்றிவிடும் என்றே கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications