ராணுவ வீரர்கள் குறைகளை தெரிவிக்க "வாட்ஸ் அப்" எண் அறிமுகம்
ராணுவ வீரர்கள் குறைகளை தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: ராணுவ வீரர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நேரடியாக ராணுவ தளபதி பிபின் ராவத்திடம் தெரிவிக்கும் வகையில், வாட்ஸ் ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லையில் இரவு பகல் பாராது பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் பி.எஸ்.எப்., வீரருக்கு தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக அண்மையில் தேஜ் பஹதூர் யாதவ் என்ற எல்லைப்பாதுகாப்புப் படை வீரர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அது வைரலாகி பெரும் அதிர்வலையை உண்டாக்கியது.
அந்த வீடியோவில், வீரர்களுக்கு குறைவான அளவில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி இருந்தார். மூத்த அதிகாரிகள் மீது ஊழல் புகார்களையும் அவர் கூறி இருந்தார். இதுதொடர்பாக ராணுவத்திடம் உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் தங்கள் குறைகளை சமூகவலைதளங்களில் வெளியிடக்கூடாது என இந்திய ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் ராணுவ வீரர்கள் தங்களின் குறைகளை தெரிவிப்பதற்காக ‛வாட்ஸ் அப்' எண்ணை பிபின் ராவத் அறிமுகப்படுத்தினார். தங்களது குறைகளை +91 9643300008 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.