இந்திய விவசாயிகள் ஒடுக்கப்படுவது கவலையளிக்கிறது.. மலாலா யூசுப்சாய் பேச்சு
ஜெய்ப்பூர்: இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் ஒடுக்கப்படுவது கவலை அளிப்பதாக பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்வி செயல்பாட்டாளரும், நோபல் பரிசு வென்றவருமான மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் 3 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு சர்வதேச பின்னணி பாடகி ரிஹானா, ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க், உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்த பட்டியலில் தற்போது மலாலா யூசுப்சாய் இணைந்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதை பாருங்கள்: அமைதியாக போராட்டம் நடத்துவோர் மீது அடக்குமுறை செய்வது, இணையதள சேவையை துண்டிப்பது, கைது செய்வது போன்றவை கவலை அளிக்கின்றன. மக்களின் குறைகளை அரசு கேட்டறிய வேண்டும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் உண்மையான நண்பர்களாக இணைந்து செயல்பட வேண்டும் என்பது எனது கனவு. இரண்டு நாடுகளுக்கும் எளிதாக மக்கள் சென்று வர வேண்டும். பாகிஸ்தான் நாட்டில் அரங்கேறும் நாடகங்களை இந்தியர்கள் பார்க்க முடிய வேண்டும். பாலிவுட் திரைப்படங்களை பாகிஸ்தான் மக்கள் பார்க்க முடிய வேண்டும். இரு நாடுகளில் கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் போட்டிகளை ரசிக்க வேண்டும் என்பது எனது கனவு.
ஒவ்வொரு நாடுகளும் எல்லைகள் வைத்துக்கொண்டு அடித்துக்கொள்வது பழைய தத்துவம். அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. மனிதாபிமானம் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் மலாலாவின் புத்தகம் தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நீங்கள் இந்தியர்கள் நான் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். நாம் இருவரும் இப்போது ஒரு நிகழ்ச்சிக்காக உரையாடிக் கொள்ளமுடிகிறது. அப்படி இருக்கும் போது, மற்றவர்கள் இடையே மட்டும் எதற்காக வெறுப்புணர்வு இருக்க வேண்டும்?
அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் உண்மையான எதிரி ஏழ்மை. பாரபட்சம். ஏற்றத்தாழ்வு போன்றவைதான். இதற்கு எதிராகத்தான் இரண்டு நாடுகளும் போராட வேண்டும். இரண்டு நாடுகளும் தங்களுக்குள் மோதிக் கொள்ளக் கூடாது.
அனைத்து பெண் குழந்தைகளும் கல்வி நிலையங்களுக்குச் சென்று கல்வி கற்க வேண்டும் என்பது எனது கனவு. இவ்வாறு மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளை கல்விக்கூடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று இவர் எடுத்த முன்னெடுப்பு, தாலிபன் பயங்கரவாதிகளுக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம், மலாலா யூசுப்சாய் மீது, தாலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியபோது, மலாலா, குண்டு காயங்களுடன் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.