சு.சுவாமி விமர்சனத்தால் கடும் அதிருப்தி.... சீனா பயணத்தை பாதியிலேயே முடித்த அருண்ஜேட்லி
டெல்லி: பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில் அவர் மீது கட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததற்கு அதிருப்தி தெரிவித்தே சீனா பயணத்தை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி பாதியிலேயே முடித்துவிட்டு நாடு திரும்பியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிசர்வ் வங்கி ஆளுநரான ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு தரக் கூடாது என்பதற்காக அவர் மீது மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்தார் சுப்பிரமணியன் சுவாமி. மனதளவில் ரகுராம் ராஜன் இந்தியர் இல்லை என்றெல்லாம் பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து தாம் 2-வது முறையாக ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் நீட்டிக்கப் போவதில்லை என அவர் அறிவித்தார்.

ரத்த ஆறு ஓடும்...
இதனைத் தொடர்ந்து தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்ததாஸ் ஆகியோரையும் சு.சுவாமி விமர்சித்தார். ஒருகட்டத்தில் நிதி அமைச்சர் அருண்ஜேட்லியும் மீதும் காட்டத்தை வெளிப்படுத்தினார் சு.சுவாமி. தாம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் ரத்த ஆறு ஓடும் என்றெல்லாம் கூட ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.

வறுத்தெடுத்த மோடி
அவரது தொடர்ச்சியான இந்த விமர்சனங்கள் பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனால்தான் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிப் பேட்டியில் பிரதமர் மோடி, சுப்பிரமணியன் சுவாமிக்கு கண்டனம் தெரிவித்து வறுத்தெடுத்திருந்தார்.

பயணத்தை பாதியில் முடித்த ஜேட்லி
இந்த நிலையில் சீனாவில் நடைபெறும் ஆசிய உட்கட்டமைப்பின் முதலீட்டு வங்கியின் தலைவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சென்றிருந்தார். ஆனால் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பாதியிலேயே அவர் நாடு திரும்பியுள்ளார்.

5 நாட்கள் பயண திட்டம்
கடந்த ஜூன் 24-ந் தேதி, 5 நாட்கள் சுற்றுப்பயணமாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சீனா சென்றிருந்தார். 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் தம்முடைய பயணத்தை ஒருநாள் முன்னதாக ஜேட்லி முடித்துக் கொண்டுவிட்டார்.

சு.சுவாமி மீது நடவடிக்கை பாயுமா?
அதற்கேற்ப அவருடைய நிகழ்ச்சி நிரல்களும் மாற்றியமைக்கப்பட்டன. திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாக சீன நிதியமைச்சர் ஜிவே, தேசிய வளர்ச்சி சீர்திருத்த ஆணைய தலைவர் ஜூஷோஷி, மக்கள் வங்கி ஆளுநர் சூவா உள்ளிட்டோரை அருண் ஜேட்லி சந்தித்தார். தற்போது நாடு திரும்பியுள்ள அருண்ஜேட்லி சு.சுவாமி மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications