மீண்டும் பாதுகாப்புத் துறை அமைச்சராக அருண்ஜேட்லி? நிதி அமைச்சர் பதவிக்கு சு.சுவாமி 'லாபி'
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி அமைச்சராக உள்ள அருண்ஜேட்லிக்கு மீண்டும் பாதுகாப்பு துறை வழங்கப்பட வாய்ப்பிருக்கிறதாம். ஜேட்லி வசம் இருந்த நிதித்துறையை பெறுவதற்கு சுப்பிரமணியன் சுவாமி, பியூஷ் கோயல் இருவரிடையே கடும் போட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வரும் 30-ந் தேதி நடைபெற உள்ளது. அப்போது, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, அமைச்சர்களின் செயல்பாடு குறித்து சுயமதிப்பீடு அறிக்கையை பிரதமர் மோடி கேட்டுள்ளாராம். இனி வரும் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களுக்காக புதிய திட்டங்களை அறிவிப்பதை மனதில் வைத்து அமைச்சர்களின் செயல்பாடுகளை மோடி மதிப்பிடுவார் எனக் கூறப்படுகிறது.

மாநில அரசியலுக்கு மனோகர் பாரிக்கர்
75 வயதுக்கு மேற்பட்ட நஜ்மா ஹெப்துல்லா உள்ளிட்ட சில அமைச்சர்கள் நீக்கப்படலாம் என தெரிகிறது. குறிப்பாக கோவா மாநில சட்டசபை தேர்தலை முன்வைத்து பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மாநில அரசியலுக்கே திருப்பி அனுப்பப்படலாம்.

ஜேட்லிக்கு பாதுகாப்பு
ஆகையால் பாதுகாப்பு அமைச்சர் இலாகா, அருண்ஜேட்லிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே பாதுகாப்புத்துறை இலாகாவை ஜேட்லி வைத்திருந்தார்.

நிதி அமைச்சர் பதவிக்கு போட்டி
இதனால் ஜேட்லி வசம் இருந்த நிதித்துறையானது தற்போதைய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்குப் போகலாம். அதே நேரத்தில் நிதித்துறை அமைச்சர் பதவியை எப்படியும் பெற்றுவிடுவது என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியும் தீவிரமாக முயற்சித்து வருகிறாராம்.

பொன்னாருக்கு 'வேட்டு'
இணை அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உள்ளிட்டோருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்படலாம். அஸ்ஸாம் முதல்வராக சர்வானந்த சோனோவால் பொறுப்பேற்றுள்ளதால், அவர் பொறுப்பு வகித்த விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சகம் காலியாக உள்ளது.
இதனை, பிரதமர் அலுவலகங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதவி பறிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications