1984, 2002 கலவரங்கள் குறித்து ராகுல் தெரிவித்த கருத்து தவறானது: பாஜக கண்டனம்
டெல்லி: 1984 மற்றும் 2002ம் ஆண்டுகளில் நடந்த கலவரங்கள் பற்றி ராகுல் தெரிவித்த கருத்துக்கு பாஜக தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ‘1984ம் ஆண்டில் நடந்த கலவரத்தில் அரசு சம்பந்தப்படவில்லை. ஆனால், குஜராத் தில் 2002ல் நடந்த படுகொலையில் அரசே ஈடுபட்டது' எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், ராகுலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக ‘விவரம் தெரியாமல் ராகுல் பேசுகிறார். 2002ல் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த குஜாரத் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. ஆனால், 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு முயற்சிக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளது.
மேலும், இது குறித்து பாஜக தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி, டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘1984ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதியன்று இந்திரவின் உடல் வைக்கப்பட்டிருந்த எய்எம்ஸ் மருத்துவமனையில் இருந்து தான் வன்முறை வெடித்தது. காங்கிரஸ் தலைவர்களே வன்முறைக்கு தலைமை தாங்கினர். ஆயிரக்கணக்கான இடங்களில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எந்த ஒரு இடத்திலும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. எவர் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை.
ஆனால் 2002 குஜராத் கலவரத்தின் போது ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கலவரக்காரர்கள் 300க்கும் மேற்பட்டோர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கானோருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதனால்,1984ஆம் ஆண்டு சீக்கியர் கொலையில் ராஜிவ் அரசு பங்கெடுக்கவில்லை என்று எப்படித்தான் ராகுல் காந்தி சொல்கிறாரோ என தெரியவில்லை '' எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக தகவல் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘காங்கிரசில் உள்ள அதிகார மையத்தின் காரணமாக, அக்கட்சியின் துணைத் தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டார். இப்போது, அவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று துதி பாடப்படுகிறது. ஆனால், மோடியின் வளர்ச்சி அதற்கு நேர்மாறானது. ஏழ்மையில் பிறந்து வளர்ந்த அவர், தனது கடின உழைப்பு, நிர்வாகத் திறமை போன்றவற்றால் பிரதமர் வேட்பாளர் அளவுக்கு உயர்ந்து வந்துள்ளார்'' என்றார்.












Click it and Unblock the Notifications