குஜராத்தில், 'வளர்ச்சி' பிரச்சாரம் எடுபடவில்லை.. 'பிரம்மாஸ்திரத்தை' கையில் எடுத்த பாஜக!
டெல்லி: குஜராத் தேர்தலில் முதலில் வளர்ச்சி பற்றி பேச ஆரம்பித்த பாஜக கடைசி நேரத்தில் மதவாதத்துக்கு திரும்பிவிட்டது.
குஜராத் சட்டசபைக்கு வரும் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நடுவே நேரடி பலப்பரிட்சை உள்ளது.
முதலில் பாஜக முன்னணியில் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், இப்போது இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோதும் அளவுக்கு ஏறத்தாழ சரிசம நிலையில்தான் உள்ளதாக கூறுகின்றன.

பாஜக மீது அதிருப்தி
அதிகபட்சமான ஜிஎஸ்டி வரி விதிப்பு, பண மதிப்பிழப்பு போன்றவை குஜராத் மக்களை பெரிதும் பாதித்துள்ளதாகவும், அதுதான் பாஜகவுக்கு எதிரான அதிருப்திக்கு காரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் வளர்ச்சி பற்றி பேசி பிரசாரத்தை ஆரம்பித்த பாஜக. இப்போது, தான் பிரம்மாஸ்திரமாக நம்ப ஆரம்பிக்கும் இந்துத்துவா நோக்கி மெல்ல நகர ஆரம்பித்துள்ளது.

ராகுல் காந்தியின் திடீர் ஆலய தரிசனம்
குஜராத்தில் ராகுல் காந்தி சோமநாதர் ஆலயத்தில் சாமி தரிசனம் நடத்திய நிலையில், அவர் தன்னை இந்து என குறிப்பிட்டார். இதனால் இந்துக்கள் வாக்குகள் சிதறுமோ என்ற அச்சம் பாஜக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் இந்து அல்ல என்று மக்களிடம் பரப்ப ராகுல் காந்தி கையெழுத்திட்ட ஆவணங்களை லீக் செய்கிறேன் என்று தப்பாக செய்யப்போய் அதனாலும், விமர்சனங்களை சந்தித்தது.

பாஜக இந்துக்கள் கட்சியாம்
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியே, தீவிரமான இந்து மதக் கட்சியான பாஜகவுக்கே, இந்துக்கள் வாக்களிப்பர் என பேச ஆரம்பித்துவிட்டார். அருண் ஜேட்லி கூறுகையில், பாஜக எப்போதுமே இந்துத்துவா ஆதரவு கட்சியாகவே பார்க்கப்படுகிறது. எனவே ஒரிஜினல் இருக்கும்போது, அதைப்போலவே க்ளோனிங் செய்யப்பட்டதை மக்கள் ஏன் ஏற்க வேண்டும்? என கேள்வி எழுப்பினார். இது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் கண்டித்துள்ளார்.

இந்துக்கள் ஓட்டுகளுக்காக போட்டி
காங்கிரசும், பாஜகவும் போட்டி போட்டு இந்துக்கள் வாக்குகளை ஈர்க்க முயற்சி செய்வது பட்டவர்த்தனமாக தெரிய ஆரம்பித்துள்ளது. மோடியை காங்கிரஸ் இந்து அல்ல என குறிப்பிட்டதும், ராகுலை, இந்து அல்ல என்று பாஜக விமர்சனம் செய்ததும் இதற்கு நல்ல உதாரணம். ராகுலின் மதம் என்ன என்ற கேள்வியை எழுப்ப ஆரம்பித்தவர்கள் இப்போது ராமஜென்ம பூமி பக்கமும் போயுள்ளனர்.

ராம ஜென்ம பூமி
ராம ஜென்ம பூமி விவகாரத்தில் நீதிமன்றத்தில் கபில் சிபல் முஸ்லீம்கள் தரப்புக்கு ஆதரவாக ஆஜராவதை முன் வைத்து, இந்த விவகாரத்தில் ராகுலின் கருத்து என்ன என்று சட்ட அமைச்சர் ரவிசங்கர் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளார். குஜராத் தேர்தல் நெருங்கும் நிலையில், மதமே விவாதங்களின் கருப்பொருளாக மாறி அங்கு பிரதானமாகியுள்ளது. அப்படியானால், வளர்ச்சி என்று சொன்னார்களே அது என்ன ஆச்சு?












Click it and Unblock the Notifications