அருணாச்சல பிரதேசத்தில் அத்தனை கட்சிகளையும் ஆட்டைய போட்டாச்சு- 60 இடங்களில் 56 பேர் பாஜக எம்எல்ஏக்கள்!
இடாநகர்: அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ், என்பிபி கட்சிகளின் மொத்தம் 4 எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டுள்ளது பாஜக. அருணாச்சல பிரதேச சட்டசபையில் மொத்தம் 60 இடங்கள். தற்போது பாஜக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
2019-ம் ஆண்டு அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 2016-ம் ஆண்டு தேர்தலில் 11 இடங்களில் வென்ற பாஜக, 2019-ல் 41 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி 7, என்பிபி கட்சி 5, காங்கிரஸ் 4, பிபிஏ கட்சி 1, சுயேட்சைகள் 2 என வெற்றி பெற்றன. 2019 தேர்தலில் முதல்வர் பேமா காண்டு உள்ளிட்ட 3 பேர் போட்டியின்றி எம்.எல்.ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறும் நிகழ்ந்தது.

அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ்குமார் ஜேடியூ இடம் பெற்றிருந்த போதே கூட்டணி கட்சி என்றும் பார்க்காமல் அதன் 6 எம்.எல்.ஏக்களை அப்படியே வளைத்துப் போட்டது பாஜக. இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏக்களையும் அடுத்தடுத்து வளைத்தது பாஜக.
தற்போது லோக்சபா தேர்தலுடன் அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் தேதி மார்ச் 8,9-ந் தேதிக்குப் பின்னர் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் திடீரென 2 கட்சிகளை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் எஞ்சிய 2 எம்.எல்.ஏக்களையும் என்பிபி கட்சியின் 2 எம்.எல்.ஏக்களையும் இழுத்துள்ளது பாஜக. அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகரில் மாநில முதல்வர் பேமா காண்டு முன்னிலையில் 4 எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இணைந்தனர்.
இதனையடுத்து அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 இடங்களில் பாஜக எம்.எல்.ஏக்களின் பலம் 56 ஆக உயர்ந்துள்ளது. பாஜகவுக்கு எதிராக 4 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications