"Beef" என்ற வார்த்தையை பயன்படுத்தினால் அழிப்போம்! ஹோட்டலுக்கு பறந்த உத்தரவு! அருணாச்சலில் பரபரப்பு
இட்டாநகர்: அருணாச்சல பிரதேச மாநில தலைநகர் இட்டாநகர் நிர்வாகம் உணவகம் ஒன்றுக்கு எழுதி உள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அருணாச்சல பிரதேச மாநில தலைநகர் இட்டாநகரில் ஃபிரண்டெசிப் என்ற உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அறிவிப்புப் பலகை தான் இப்போது பேசுபொருள் ஆகி உள்ளது.
அந்த அறிவிப்புப் பலகையில் ஹோட்டலில் ஃபீப் எனப்படும் மாட்டு இறைச்சி விற்பனை செய்யப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. இது குறித்து இட்டாநகர் நிர்வாகம் ஹோட்டலுக்கு கடிதம் எழுதி உள்ளது.

மாட்டிறைச்சி
இட்டாநகர் மாவட்ட நிர்வாகம் எழுதி உள்ள கடிதத்தில், "இட்டாநகர் தலைநகர் மாவட்ட நிர்வாகம் இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற நிலையை முழுமையாக நம்புகிறது. ஆனால் ஹோட்டல் பலகைகளில் ஃபீப் எனப்படும் 'மாட்டிறைச்சி' என்ற வார்த்தை வெளிப்படையாகக் காட்டப்படுவது சமூகத்தின் சில பிரிவினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் சில பிரிவினருக்கு இடையே பகைமையை ஏற்படுத்தக் கூடும்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

சர்ச்சை
அனைத்து ஹோட்டல் பலகைகளில் இருந்தும் மாட்டிறைச்சி என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. இட்டாநகர் மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இணையத்தில் பலரும் இட்டாநகர் நிர்வாகத்தின் உத்தரவைக் கடுமையாகச் சாடி வந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக இட்டாநகர் கூடுதல் உதவி ஆணையர் (இஏசி) தாமோ தாதா விளக்கம் அளித்துள்ளார்.

விளக்கம்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "எதிர்காலத்தில் மதப் பிரச்சினையை மக்கள் உருவாக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத் தடுப்பு நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாட்டிறைச்சி சாப்பிடுவதற்குத் தடை இல்லை என்பதால் மக்கள் இந்த உத்தரவால் குழப்பமடைய வேண்டாம். இதுபோன்ற பலகைகள் இந்து சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி ஒரு குழுவினரிடமிருந்து வாய்மொழியாகப் புகார் வந்தது.

புகார்
இதுபோன்ற ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் பலகைகளில் மாட்டிறைச்சி என்ற வார்த்தை வெளிப்படையாகக் காட்டப்படுவது சமூகத்தின் சில பிரிவினரின் உணர்வுகளைப் புண்படுத்தும். சில உள்ளூர் மக்கள், இது தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகப் புகார் அளித்தனர். இதற்கும் அரசியல் மற்றும் மத ரீதியான அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுவது பொய். அப்படி எதுவும் இல்லை.

இந்துக்கள்
இந்துக்கள் மாட்டிறைச்சியை உண்பதில்லை. அது அவர்களின் மதத்திற்கு எதிரானது. மேலும் அவர்கள் பசுவைப் புனிதமான ஒன்றாகக் கருதுகின்றனர். அது பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். மேலும், நாட்டில் எங்கும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் இறைச்சியைப் பரிமாறினாலும் கூட மாட்டிறைச்சி பலகைகள் வெளிப்படையாக இருப்பதை நீங்கள் பார்க்க முடியாது.

தடை இல்லை
ஹோட்டல்களில் பிறரின் மத உணர்வுகளைப் புண்படுத்தாமல் மாட்டிறைச்சி பரிமாறுகிறோம் என்பதைக் குறிப்பிடும் வார்த்தைகளை பயன்படுத்தலாம். அருணாச்சல பிரதேசத்தில் பலரும் மாட்டிறைச்சியை உட்கொள்கின்றனர். அதற்கான ஹோட்டல்களும் இங்குப் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இது அனைவருக்கும் தெரியும். எனவே, மாட்டிறைச்சிக்குத் தடை என்பதெல்லாம் பொய்.

அழிப்போம்
அதேநேரம் ஹோட்டல் பலகைகளில் மாட்டிறைச்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவை மிகவும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த உள்ளோம். மாட்டிறைச்சி இருக்கும் பலகைகளை அழிக்க உள்ளோம். மேலும், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என்றார். இருப்பினும், இதற்கு அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.












Click it and Unblock the Notifications