கேரளாவின் அருவிக்கராவில் ஆர்.கே. நகர் இடைதேர்தலை பேசிய குஷ்பு... சுதாரித்த உம்மன்சாண்டி
திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திரமோடி ரூ.1லட்சம் மதிப்புள்ள கோட்டு அணிந்துகொண்டு விமானப்பயணம் செய்து வெளிநாடுகளில் சுற்றுகிறார். அங்கு செல்பி எடுக்கிறார் என்று கேரளா மாநில அருவிக்கராவில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார் குஷ்பு.
அதேநேரத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் பற்றியும், தமிழக அமைச்சர்களைப் பற்றியும் ஏன் பேசினார் என்பதுதான் உம்மன் சாண்டி உட்பட யாருக்கும் புரியவேயில்லை.
2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அருவிக்கரா தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கார்த்திக்கேயன் மரணம் அடைந்ததை அந்த தொகுதி காலியாக இருந்தது. வரும் 27ம் தேதி இங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இங்கு காங்கிரஸ் சார்பில் கார்த்திகேயனின் மகன் சபரிநாதன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.ராஜகோபால், கம்யூனிஸ்டு சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயக்குமாரும் போட்டியிடுகிறார்கள்.
இந்த தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்டுகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. நேற்று உச்சக்கட்ட பிரச்சாரம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்புவும், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் சுரேஷ் கோபியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ராகுல் நடைபயணம்
காங்கிரஸ் வேட்பாளர் சபரிநாதனை ஆதரித்து ஆரியநாடு பகுதியில் பிரச்சாரம் கொண்ட குஷ்பு பேசினார். அப்போது, அவர் ராகுல்காந்தி ஏழை விவசாயிகளுக்காக போராடி வருகிறார். அவர் மாநிலம் வாரியாக சென்று விவசாயிகளுக்காக நடைப்பயணம் மேற்கொள்கிறார் என்றார்

செல்ஃபி மோடி
ஆனால் பிரதமர் நரேந்திரமோடி 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோட்டு அணிந்துகொண்டு விமானப்பயணம் செய்து வெளிநாடுகளில் சுற்றுகிறார். அங்குபோய் செல்ஃபி எடுப்பதுதான் அவருக்கு பிரதான வேலை என்றார்.

ஹிட்லர் ஆட்சி
லோக்சபா தேர்தலின் போது வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. பிரதமர் மோடி ஹிட்லர் போல ஆட்சி செய்கிறார். அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துபோய் உள்ளனர்.

சர்ச்சை அமைச்சர்கள்
பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்கள் சர்ச்சையில் சிக்கி உள்ளனர். மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே, பங்கஜ் முண்டே போன்றவர்களை இன்னும் நீக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆர்.கே.நகர் தேர்தல்
தேசிய அரசியலை பேசிக்கொண்டிருந்த குஷ்பு திடீரென தமிழக அரசியலுக்கு தாவினார். ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இதனால் அமைச்சர்கள் அனைவரும் இந்த தொகுதியில் முகாமிட்டு உள்ளனர். ஜெயலலிதாவுக்கு ஓட்டு குறைந்தால் தங்கள் பதவி பறிபோய்விடும் என்று அமைச்சர்கள் பயத்துடன் உள்ளனர் என்றார். இதைக்கேட்ட உம்மன் சாண்டி உட்பட அனைவரும் கொஞ்சம் அதிர்ச்சி ரியாக்சன் கொடுத்தனர்.

உம்மன் சாண்டிக்கு பாராட்டு
திடீரென்று சுதாரித்த குஷ்பு, நான் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சென்று உள்ளேன் ஆனால் கேரள முதல் அமைச்சர் உம்மண்சாண்டி போல ஒரு முதல்வரை பார்த்தது இல்லை என்றார்.

பெண் ரசிகைகள்
குஷ்புவை பார்ப்பதற்காக அவர் பேசிய மேடை அருகே ஏராளமான பெண்கள் உற்சாகமாக வந்தனர். அவர்களுடன் குஷ்பு கை குலுக்கினார். பலர் குஷ்புவை தங்கள் செல்போனில் படம்பிடித்து மகிழ்ந்தனர். சுரேஷ் கோபியை களமிறக்கிய பாஜகவிற்கு எதிராக குஷ்புவை அழைத்துச்சென்று பிரச்சாரத்தை சூடு பிடிக்க வைத்த உற்சாகத்தில் இருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
|
தூங்கிய உம்மன் சாண்டி
இதனிடையே தன்னுடைய பிரச்சாரம் பற்றி புகைப்படத்தை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் குஷ்புவின் அருகில் அமர்ந்துள்ள உம்மன் சாண்டி அசந்து தூங்கியது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.












Click it and Unblock the Notifications