ராஜினாமா செய்ததற்கு 'ஸாரி' கேட்கும் கெஜ்ரிவால்.. பதவியை விட்டுத் தூக்கத் திட்டமிடும் ஆம் ஆத்மி!
டெல்லி: டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் ஊழலுக்கு எதிரான ஜன லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றாததை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிப்ரவரி மாதம் 14ம் தேதி டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து டெல்லியில் ஜனதாபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற்காக கெஜ்ரிவால் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கெஜ்ரிவால் டெல்லி ஆளுநர் நஜீப் யங்கை சந்தித்து மீண்டும் அரசு அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்க உள்ளதால் டெல்லி சட்டசபையை கலைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் இது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில்,
மீண்டும் அரசு அமைப்பது குறித்து ஆலோசித்தோம். தற்போதுள்ள சூழலில் அரசு அமைப்பது சாத்தியம் இல்லை. அதனால் அறிவுரை கேட்பதில் பலனில்லை. எனவே நாங்கள் மறுதேர்தலுக்கு தயாராகி வருகிறோம். நாங்கள் பாதியில் ஓடிவிட்டோம் என்று நினைத்து மக்கள் எங்கள் மீது கோபமாக உள்ளனர். நான் தவறு செய்துவிட்டேன் என்று மக்கள் என்னிடம் தெரிவித்தனர். நான் மீண்டும் தவறு செய்யக் கூடாது என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர் என்றார்.
பதவி:
நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 430 பேர் போட்டியிட்டனர். ஆனால் வெறும் 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். கெஜ்ரிவாலின் பிரச்சார அணுகுமுறை சரியில்லாதது தான் தோல்விக்கு காரணம் என்று கட்சியினர் கருதுகிறார்கள். இதனால் கெஜ்ரிவாலை தலைவர் பதவியில் இருந்து நீக்க கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications