ஹரியானாவில் அரவிந்த் கேஜ்ரிவால் மீது ஹசாரே ஆதரவாளர் திடீர் தாக்குதல்!!
பிவானி: ஹரியானா மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது அவரது குருநாதர் அன்னா ஹசாரேவின் ஆதரவாளர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.
லோக்சபா தேர்தலுக்காக ஹரியானா மாநிலத்தில் 3 நாள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். ஹரியானா மாநிலத்தின் சார்ஹி தாத்ரி என்ற இடத்தில் திறந்த ஜீப்பில் கேஜ்ரிவால் பிரசாரத்தைத் தொடங்கினார்.

அப்போது திடீரென கேஜ்ரிவாலின் பிரசார வாகனத்தின் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென ஏறினார். யாரும் எதிர்பாராதவிதமாக கேஜ்ரிவாலின் கழுத்துப் பகுதியில் அந்த நபர் தாக்கினார்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதில் ஆத்திரமடைந்த கேஜ்ரிவால் ஆதரவாளர்கள் மர்ம நபரை சராமரியாக அடித்து துவைத்தனர். அதன் பின்னர் போலீசாரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார்.
வன்முறையில் ஈடுபடாதீர்...
இந்த சம்பவம் குறித்து கேஜ்ரிவால் கூறியுள்ளதாவது:
என் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எனது ஆதரவாளர்கள் அந்த நபரைத் தாக்கிவிட்டனர். இது மிக மிக தவறானது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.
நாம் வன்முறையில் ஈடுபடக் கூடாது. இப்படியான வன்முறைகளை அன்பால்தான் நாம் எதிர்கொள்ள வேண்டும். இதுபோல வன்முறை சம்பவங்களில் நாம் ஈடுபடுவோமேயானால் நமது இயக்கமே அழிக்கப்பட்டுவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.
ஹசாரே ஆதரவாளர்
இதனிடையே கேஜ்ரிவாலை தாக்கியது அன்னா ஹசாரேவின் ஆதரவாளர் ஜிதேந்தர்சிங் என்றும் ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை ஆம் ஆத்மியாக்கியதற்காகவே கேஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அந்த நபர் போலீசில் கூறியுள்ளார்.
ஏற்கெனவே வாரணாசியில் பிரசாரம் மேற்கொண்ட கேஜ்ரிவால் மீது முட்டைகளும் கருப்பு மையும் வீசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications