கெஜ்ரிவாலுக்காக தயாராகும் ஐந்து படுக்கையறை பங்களா – அடுத்த வாரத்தில் பால் காய்ச்சும் வைபவம்!
டெல்லி: டெல்லி முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், சிவில் லைனில் அமைந்துள்ள 5 படுக்கையறைகளுடன் கூடிய அரசு குடியிருப்பிற்கு அடுத்த வாரத்தில் இடம் பெயருவார் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தன்னுடைய சர்க்கரை நோய் மற்றும் ஓயாத இருமல் பிரச்சினைகளுக்காக பெங்களூருவில் நேச்சுரோபதி மருத்துவ சிகிச்சையினை எடுத்துக் கொண்டிருக்கும் கெஜ்ரிவால் அங்கிருந்து டெல்லி வந்ததும் அக்குடியிருப்பிற்கு மாறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பர் 6ல் அமைந்துள்ள அவரது புதிய குடியிருப்பின் மேலாண்மைப் பணிகள் பெருமளவில் முடிந்துள்ள நிலையில், மார்ச் 17 ஆம் தேதியன்று டெல்லி திரும்புவார் கெஜ்ரிவால் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பதவியேற்பு விழாவின்போதே, பெரிய வீடு ஒன்றில் தங்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அலுவலக அமைப்பிற்கும், சந்திக்க வருகின்றவர்களுக்காகவும் பெரிய இடமுடைய வீடே சிறந்தது என்று தெரிவித்திருந்தார்.
இப்புதிய சிவில் சர்வீஸ் லைன் வீட்டில் 4 படுக்கையறைகளும், ஒரு விருந்தினர் அறையும், இரண்டு அலுவலகங்களும், 300 பேர் வரை கொள்ளக்கூடிய பெரிய தளமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காசிதாபாத்தில் தன்னுடைய பெற்றோர், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகின்றார் கெஜ்ரிவால். தற்போது அவர் வசித்து வருகின்ர குடியிருப்பு அவருடைய மனைவிக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்பாகும்.












Click it and Unblock the Notifications