கெஜ்ரிவாலை இன்னும் நம்பும் டெல்லி மக்கள்.. மீண்டும் முதல்வராக விருப்பம்: ஜீ-தலீம் கருத்துக்கணிப்பு
டெல்லி: டெல்லி முதல்வர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் பொருத்தமானவர் என்று ஜீ நியூஸ்-தலீம் ரிசர்ச் பவுன்டேஷன் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பாஜக சார்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியும் முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜீ நியூஸ்-தலீம் ரிசர்ச் பவுன்டேஷன் மக்கள் யார் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பது குறித்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதன் முடிவு விவரம் வருமாறு,
கெஜ்ரிவால்
கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 10ல் மூன்று பேர் அதாவது 31.7 சதவீதம் பேர் கெஜ்ரிவால் முதல்வராகவே விருப்பம் தெரிவித்துள்ளனர். கிரண் பேடி முதல்வராக வேண்டும் என்று வெறும் 5 சதவீதம் பேரே தெரிவித்துள்ளனர். சிலருக்கு யார் முதல்வராக வேண்டும் என்றே தெரியவில்லை.
ஆம் ஆத்மி
பெண் வேட்பாளர்கள் அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகளில் 37.6 சதவீதம் பேர் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆண் வாக்காளர்களில் 45.5 சதவீதம் பேர் பாஜகவுக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள்.
பாஜக
டெல்லியில் ஒவ்வொரு 1000 ஆண் வாக்காளர்களுக்கு 802 பெண் வாக்காளர்களே உள்ளனர். அதனால் தான் பெண் வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள போதிலும் பாஜக முன்னணியில் உள்ளது.
பெண் வாக்காளர்கள்
கெஜ்ரிவால் பார்க்க இளமையாகவும், எளிமையாகவும், நேர்மையான குடும்பத் தலைவராகவும் இருப்பதாக பெண் வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். கெஜ்ரிவால் விலை உயர்வு, ஊழல், மின் பற்றாக்குறை, குடிநீர் பிரச்சனையை தீர்ப்பார் என்று பெண் வாக்காளர்கள் நம்புகிறார்கள். மேலும் டெல்லி பெண்களுக்கு கெஜ்ரிவால் பாதுகாப்பு அளிப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். டெல்லி பாதுகாப்பாக இல்லை என நினைக்கும் 83.9 சதவீத பெண்கள் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக உள்ளனர்.